சொத்துவரி செலுத்த இன்று கடைசி தினம்.. நாளை முதல் தனிவட்டி அபராதம்: சென்னை மாநகராட்சி..!

Mahendran

திங்கள், 31 மார்ச் 2025 (09:55 IST)
சென்னை மாநகராட்சி சொத்துவரி மற்றும் தொழில்வரி செலுத்துவதற்கான இறுதித் தேதி இன்றுடன் முடிவடைகிறது. மாநகராட்சிக்குட்பட்ட சொத்து உரிமையாளர்களும், வணிக நிறுவனங்களும் இன்று மாலைக்குள் சொத்து வரி கட்ட அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
 
இதுகுறித்து மாநகராட்சி வருவாய் துறை அதிகாரிகள் கூறியதாவது:
 
"சென்னை மாநகராட்சிக்கு மிகப்பெரிய வருவாய் மூலமாக சொத்துவரி கருதப்படுகிறது. மொத்த வருவாயில் சுமார் 35% சொத்துவரி மற்றும் தொழில்வரியின் மூலம் கிடைக்கிறது. மாநகராட்சியின் வளர்ச்சித் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த, சொந்த வருவாய் அதிகரிக்க வேண்டியது மிக அவசியம்.
 
இதன் பேரில், நீண்ட காலமாக வரி செலுத்தாமல் இருப்பவர்களின் பட்டியல் மாநகராட்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், நடப்பு நிதியாண்டு மார்ச் 31-இல் முடிவடைவதால், நிலுவையிலுள்ள வரிகளை உடனடியாக செலுத்த பொதுமக்களுக்கு கடந்த ஒரு மாதமாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.
 
இந்த காலக்கெடு முடிந்த பிறகு, வரி செலுத்தாதவர்களுக்கு மாதத்துக்கு 1% தனி வட்டி அடிப்படையில் அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து வரியை செலுத்தாமல் இருப்பவர்களிடம் இருந்து சொத்துகளை மீட்டெடுக்கும் நடவடிக்கைகள் மண்டல அளவில் மேற்கொள்ளப்படும்.
 
பொதுமக்கள் தங்களுடைய நிலுவை வரிகளை மாநகராட்சி அலுவலகங்கள், அரசு இ-சேவை மையங்கள், அல்லது மாநகராட்சி இணையதளம் மூலம் செலுத்தலாம்,” என்று கூறியுள்ளனர்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்