தெற்கில் ஒரு அரச பயங்கரவாதம் : எங்கும் மரண ஓலங்கள்!

புதன், 23 மே 2018 (12:36 IST)
புரட்சி ! போர் !! செங்குருதி !!!
 
எங்கும் மரண ஓலங்கள்! 
 
மக்கள் அழுது புழம்பவில்லை ! 
 
இது என்ன சிரியவா  பாலஸ்தீனா ? தமிழ் ஈழமா ? 
 
மக்களின் துயரங்களை எழுத வார்தைகளைத்தேடினேன் ! 
 
கண்ணீரைத்தவிர  வேறு எதுவும்  கிடைக்கவில்லை.
 
ஜெனரல் டயரும்,  எடப்பாடிச்சாமியும்:
 
வடக்கைப்போலவே சரியாக 99 ஆண்டுகளுக்குப பிறகு தெற்கிலும் ஒரு ஜாலியன் வாலாபாக் படுகொலை. அங்கு ஒரு ஜெனரல் டயர். இங்கு பழனிச்சாமி அன் கோ. அவர்கள் அந்நியருக்கு எதிரான போராட்டத்தில் தங்களின் நெஞ்சில் துப்பாக்கி குண்டுகளை சுமந்தன. இங்கு, இன்று தம் மண் காக்கப் புறப்பட்ட ஒரு கூட்டம், அனில் அகர்வால் என்ற மார்வாடியின் சில எலும்புத்துண்டுக்களுக்கான அரசால் தங்களின் நெஞ்சில் துப்பாக்கிக்குண்டுகளை சுமந்தன. மீண்டும் ஒரு சுதந்திரப் போர். இங்கு ஜெனரல் டயரை விட மோசமான ஒரு நபர் எடப்பாடி..

 
ஒரு அரச பயங்கரவாதம்:
 
சுவாசிக்கத் தூய்மையான காற்றைக்கேட்டார்கள். அதற்க்காக அவர்களின் மூச்சை நிறுத்தி இருக்கிறது இந்த அரசு. இது உண்மையில் ஒரு அரச பயங்கரவாதம். அதிகாரம் தன் சொந்த மக்களை சுட்டுக் கொன்று இருக்கிறது. அப்பாவி மக்கள் மீது துப்பாக்கி முனையில் அதிகாரம் காட்டிய ஒரு பெட்டை அரசாங்கம் இது. காக்க வேண்டிய காவல் துறை மக்களின் நெஞ்சில் சுட்டது. வெற்றி கண்டோம் என்று நினைக்கிறதா  இந்த நீரோவின் அரசு ?
 
போலீசாருக்கு அதிகாரம் கொடுத்தது யார்?
 
போராட்டத்தை கட்டமைத்தவர்களை, மக்கள் அதிகாரம், புரட்சிக்கர  இளையர் கூட்டமைப்பு ,நாம் தமிழர் என தேடித் தேடி கொலை செய்யும் அளவுக்கு அவர்கள் என்ன தவறு செய்தார்கள்? காவல் துறை ஏவல் துறையானா கதை தெரியும். ஆனால் ரவுடிகளின் துறை ஆன கொடூரம் தன்னை பார்க்கிறோம். மக்களின் வரிப் பணத்தில் சாப்பிட விட்டு அவர்களையே கொலை செய்யும் அதிகாரம் யார் உங்களுக்கு தந்தது? சினைப்பர் குண்டுகள் மழைப் பொழியும் அளவுக்கு உங்கள் கரங்களுக்கு அதிகாரம் தந்தவன் யார் ? தமிழ்நாடு காவல் துறை ஆணைகள் பிரிவு 703 பிரிவு 123 மீறும் அதிகாரம் தந்தது யார்? யார் உங்கள் எசமானர்கள்? அதிகாரத்திற்கு விலை போன நவீன சாதியா நீங்கள்? நீங்கள் என்ன நீரோவின் வழி தோன்றல்களா? 
 
யாருக்கு பட்டம் தருகிறார் R J பாலாஜி?
 
பயங்கரவாதிகள் என்று யாருக்கு பட்டம் தருகிறார்  R.J பாலாஜி? உங்கள் லட்சணத்தை எல்லாம் நாங்கள் ஜல்லிக்கட்டு போராட்டத்திலேயே பார்த்து ஆகி விட்டது. உங்களின் கருத்துக்களை எல்லாம் பரண் மேல் ஏற்றுங்கள். எங்களுக்கு பாடம் சொல்ல நீங்கள் யார் ? 
 
போராடியவர்கள் பயங்கரவாதிகள் என்றால், மக்களைக்  கொன்ற இந்த அரசும், அதற்கு வக்காளத்து வாங்கும் H. ராஜா, R J பாலாஜி போன்றோர்கள் எல்லாம் அதி பயங்கரவாதிகள்.
 
மாவீரர்கள் வணக்கம்:
 
 மாவீரர்கள் மண்டி இடுவதும் இல்லை !
மடிவதும் இல்லை !  மரணம் அவர்களுக்கு புதிதும் இல்லை !
மாண்டவர்கள் சுவாசங்கள் காற்றுடன் சேர்க !
தூயவர்க் கண்ணொளி சூரியனுடன்  சேர்க !
பூதங்கள் ஐந்தி லும்  உம் பொன் உடல் சேர்க !
உம் வீரம் மட்டும் எம்முடன் சேர்க !
மக்கள் மாண்டதும் போதும் ! எடப்பாடி ஆண்டதும் போதும் !
 
இரா.காஜாபந்தாநவாஸ்
[email protected]

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்