தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு பக்தி இல்லாததால்தான் முருகன் பக்தர்கள் மாநாடு நடத்தப்படுகிறது," என்று தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். மதுரையில் நடைபெற உள்ள முருக பக்தர்கள் மாநாடு குறித்த செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் பேசுகையில்:
அரசியல்வாதிகளுக்கும் ஆன்மீகம் இருக்கும் என்பதை மறக்கக் கூடாது. 'நான் சாமி கும்பிடக் கூடாது' என்று யாராவது சொல்ல முடியுமா? இந்த மாநாட்டு திடலில் அரசியலை அதிகமாக பேச விரும்பவில்லை. எனவே, பக்தி மற்றும் ஆன்மீகம் குறித்து மட்டுமே பேசுவோம்.
அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, 'உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோருக்கும் தமிழ்நாட்டிற்கும் என்ன தொடர்பு, அவர்கள் ஏன் முருக பக்தர்கள் மாநாட்டுக்கு வருகிறார்கள்?' என்று கேள்வி எழுப்பியுள்ளார். அவர்களும் இந்த நாட்டின் குடிமக்கள்தான். நான் ஊடகங்கள் வாயிலாக அவரிடம் ஒரு கேள்வியை கேட்கிறேன்: 'ஆந்திரத்திலிருந்து இங்கு வந்து சாமி தரிசனம் செய்யக் கூடாதா?'
திமுக ஆட்சியில் ஆன்மீகத்தை காப்பாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. முதல்வருக்கு பக்தி இல்லை. அதனால்தான் இந்த மாநாடு நடைபெறுகிறது. முதல்வர் நடத்திய மாநாடு முழுக்க முழுக்க அரசியல் காரணங்களுக்காக நடத்தப்பட்டது," என்று நயினார் நாகேந்திரன் ஆவேசமாக பேசினார்.