எடப்பாடி பழனிச்சாமி ஒரு கேள்விக்குறி!

சனி, 13 அக்டோபர் 2018 (12:13 IST)
எடப்பாடி பழனிச்சாமி ஒரு புதுமையான உலோகம். காலம் அவரை புதிதுப் புதிதாக வார்க்கிறது. பல நேரங்களில், பல நிர்பந்தங்கள், இந்த நிர்பந்த்திற்கு இவர்கள் வளைக்கிறார்கள். வளையாதவர்களை காவல்துறை கரம் கொண்டு உடைத்து நொறுக்குகிறார்கள். 
 
இந்த தமிழகம் பல விசித்திரமான அமைச்சர் பெருந்தகைகளைப்  பார்த்து இருக்கிறது. ஆனால் தினமும் ரெய்டுகள், சிபிஐ விசாரணை வளையங்கள், டெல்லியின் தொடர் அழுத்தங்கள் என சிறப்பாக  ஒரு ஆட்சி. அது பழனிச்சாமியின் ஆட்சி. 
 
இதன் முத்தாய்ப்பாய் முதல்வரும் சிபிஐ விசாரணை வளையத்தில்! இவர்கள் சாவிலும், சாம்பலிலும், இவர்கள் பாடையில் படுத்துயிலும்  போதினிலும், ஓடையிலே இவர்கள் சாம்பல் ஓடும்  போதினிலும், தமிழ் சமூகம் சொல்லும் இவர்களின் ஊழல்களை. ஊழல் இவர்களின் அடையாளம் ஆகி விட்டது. 
 
யார் இந்த அமைச்சர் பெருந்தகைகள்?
 
இவர்கள் ஆக்ஸ்போர்டிலும், கேம்பிரிட்ஜ்லும்  படித்தவர்கள் அல்ல. செல்வக் குடியில் பிறந்தவர்களும் அல்ல. இவர்கள் சில குருக்கள் பார்க்க கோடி நன்மை பெற்றவர்கள். இவர்கள் ஆற்றாமையினால் அரசியலுக்கு வந்தவர்கள். 
 
வாழ இவர்களுக்கு ஒரு கூரை போதும். ஒரு கவளம் உணவு போதும். நான்கு முழ உடைப்போதும். ஆனால் மன்னர் குடும்பத்தில் பிறந்த இங்கிலாந்து இளவரசர்கள் போல வலம் வரும் அமைச்சர் பெருந்தகைகள்.  இவர்களின் பேராசையால் மாளிகைகள் என்ன? குவித்த சொத்துக்கள் என்ன? இன்று இவர்கள் தூக்கம் இன்றி தவிக்கிறார்கள். அல்லல் பட்டு  ஆற்றாது அழுத மக்கள் கண்ணீர் அறியாதவர்கள். பதவி விலகி வழக்கை சந்திக்க ஆண்மை அற்றவர்கள். 
 
அணு அளவும் துணிவு இல்லாத முதலமைச்சருக்கு வானளவு அதிகாரம் எதற்கு? 
 
பெருச்சாளிகள் எப்படி போராளிகளின் வரலாற்று மணம் அறிவார்கள்? 
 
காத்திருக்கும்  மக்கள்:
 
காக்கைக்கூட  இவர்களை கவனிக்காது. ஆனால் இந்த உலகமே இவர்களை கவனிப்பதாய் உணர்கிறார்கள். கடலில் பெய்யும் மழையைப் போல, பகலில் எரியும் தீபம் போல தான் இவர்களுக்கு  வழங்கப்படும் அறிவுரைகளும். இருந்த போதும் மக்கள்   நம்பிக்கையாய் இருக்கிறார்கள். இறுதியானதும், உறுதியானதும் ஒன்று மட்டும் தான். அது தான் ஒரு விரல் புரட்சி.   

 
 
இரா காஜா பந்தா நவாஸ்
[email protected]

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்