மழைக்காக யாகம் குறித்த வழக்கில் சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு!

புதன், 15 மே 2019 (18:53 IST)
மழை வேண்டி கோவில்களில் யாகம் செய்ய வேண்டும் என்று அறநிலையத்துறை பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சென்னை ஐகோர்ட் இன்று அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது
 
தமிழ்கத்தில் இந்த ஆண்டு மழை பொய்த்ததை அடுத்து சென்னை உள்பட பல நகரங்களில் தண்ணீர் தட்டுப்பாடு உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் மழை பெய்ய, பிரபலமான கோவில்களில் சிறப்பு யாகம் நடத்த வேண்டும் என்றும், அமிர்தவர்ஷினி, மேகவர்ஷினி, கேதாரி, ஆனந்த பைரவி, ரூப கல்யாணி போன்ற ராகங்களை வாசித்து வழிபாடு செய்ய வேண்டும் என்றும் இந்து அறநிலையத்துறை சமீபத்தில் உத்தரவு ஒன்றை பிறப்பித்தது
 
இந்த உத்தரவுக்கு கி.வீரமணி உள்ளிட்ட பகுத்தறிவாளர்கள் கடும் கண்டனங்கள் தெரிவித்தனர். மேலும் மழை வேண்டி நடத்தப்படவுள்ள யாகங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்த அறநிலையத்துறை பஞ்சாங்கத்தின் அடிப்படையில் யாகம் செய்ய உத்தரவிட்டதாக விளக்கம் அளித்தது.
 
இந்த நிலையில் இன்று வெளியான இந்த வழக்கின் தீர்ப்பில், தமிழ்நாட்டு ஜோதிடர்களை போல துல்லியமாக மேலை நாட்டு விஞ்ஞானிகளாலும் வானவியல் நிகழ்வுகளை துல்லியமாக கணிக்க முடியாது. நமது பஞ்சாங்கங்கள் அந்த அளவுக்கு தெளிவாக வான் சாஸ்திரங்களை கணித்துள்ளன. எனவே பஞ்சாங்கத்தின் அடிப்படையில் இதுபோன்று நடைபெறும் யாகங்களை தடை செய்ய அவசியம் இல்லை என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்