நிறைவடைந்தது புத்தகக் கண்காட்சி: ரூ.18 கோடிக்கு விற்பனை என தகவல்

திங்கள், 21 ஜனவரி 2019 (07:43 IST)
சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரியில் புத்தகத்திருவிழா நடைபெறுவது கடந்த சில ஆண்டுகளாக வழக்கமாக உள்ளது. பரபரப்பான கம்ப்யூட்டர் உலகில் புத்தகம் வாசிக்கும் பழக்கம் குறைந்துவிட்டதாக கருதிவரும் நிலையில் இதுபோன்ற புத்தகத்திருவிழாவின் மூலம் தான் இளைஞர்களுக்கு புத்தகத்தின் மீது ஒரு ஈர்ப்பு ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த 4ஆம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களால் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் தொடங்கி வைக்கப்பட்ட புத்தகக் கண்காட்சி நேற்றுடன் முடிவுக்கு வந்தது. 17 நாட்கள் நடைபெற்ற இந்த புத்தகக் கண்காட்சியில், இந்த ஆண்டு 18 கோடி ரூபாய் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனையாகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

இந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவில் 820 அரங்குகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட தமிழகத்தில் உள்ள அனைத்து பதிப்பகங்களும் ஸ்டால்கள் போட்டிருந்தன. கலை, அறிவியல், இலக்கியம், பொருளாதாரம், உலக அரசியல், பாடப்புத்தகங்கள்  என பல்வேறு வகைகளில் ஏராளமான புத்தகங்களும் இந்த கண்காட்சியில் விற்பானைக்கு வைக்கப்பட்டிருந்தது

அதுமட்டுமின்றி தினந்தோறும் மாலை நேரத்தில் கருத்தரங்கம், சொற்பொழிவுகள் ஆகியவைகளும் சிறப்பாக நடந்தது. இந்த புத்தக கண்காட்சிக்கு 17 நாட்களில் சுமார் 15 லட்சம் பேர் வருகை தந்ததாகவும், ரூ.18 கோடிக்கும் மேல் புத்தகங்கள் விற்பனையாகியதாகவும் பதிப்பக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்