அனிதா தற்கொலைக்கு தூண்டப்பட்டுள்ளார் - கிருஷ்ணசாமி சர்ச்சை கருத்து

ஞாயிறு, 3 செப்டம்பர் 2017 (11:32 IST)
தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் மரணத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கருத்து தெரிவித்துள்ளார். 


 

 
அனிதாவின் மரணத்திற்கு மத்திய மாநில அரசுகளே காரணம் என்று அரசியல் தலைவர்களும், சினிமா துறை மற்றும் பொது மக்கள் பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளது. 
 
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய கிருஷ்ணசாமி “அனிதாவின் மரணம் தன்னிச்சையானது அல்ல. அவர் தற்கொலைக்கு தூண்டப்பட்டுள்ளார். உச்ச நீதிமன்றம் வரை போராடும் குணம் பெற்ற அனிதாவை யாரோ தற்கொலைக்கு தூண்டியுள்ளனர். எனவே, அனிதாவின் மரணத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும். அவர் மரணத்தில் மிகப்பெரிய சதி இருக்கலாம். இது தொடர்பாக, திமுக முன்னாள் எம்.எல்.ஏ சிவசங்கரன், கல்வியாளர் கஜேந்திர பாபு ஆகியோரை விசாரிக்க வேண்டும். 
 
அனிதாவின் மரணத்தின் மூலம் அரசியல் ஆதாயம் பெறும் முயற்சி தமிழகத்தில் நடக்கிறது. அதோபோல், இதை வைத்து தமிழகத்தில் கலவரத்தை ஏற்படுத்தவும் முயற்சி நடக்கிறது” என அவர் தெரிவித்தார்.
 
நீட் தேர்வில் வெற்றி பெறமுடியாமல், தனது மருத்துவர் கனவு கலைந்ததால் மன உளைச்சல் ஏற்பட்டு தற்கொலை செய்து கொண்டார் அனிதா. ஆனால், அரசியல் ஆதாயத்திற்காக கிருஷ்ணசாமி போன்றவர்கள் இதை வேறு பக்கம் திசை திருப்புகின்றனர் என சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்