சூர்யா, ஜோதிகா மற்றும் சிவகுமார் மீது புகார்

திங்கள், 14 செப்டம்பர் 2020 (14:57 IST)
நடிகர் சூர்யா, ஜோதிகா, சிவக்குமார் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 
 
முன்னதாக நீட் தேர்வு குறித்த பயத்தால் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தமிழக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து நடிகர் சூர்யா நீட் தேர்வை விமர்சித்து காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டார். 
 
இதற்கு பாஜகவினரும், நீட் தேர்வுக்கு ஆதரவாக பேசுவோரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அதேசமயம் சூர்யாவுக்கு ஆதரவாகவும் குரல்கள் எழுந்து வருகின்றன. இதுகுறித்து சூர்யா ரசிகர்களும், நீட் தேர்வை ரத்து செய்ய குரல் கொடுப்போரும் #TNStandWithSuriya என்ற ஹேஷ்டேக் மூலமாக ட்ரெண்ட் செய்து வருகின்றனர். 
 
சூர்யாவின் அறிக்கையில் நீதிமன்றம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தெரிவித்திருந்தார். கொரோனாவுக்கு பயந்து காணொளி மூலம் நீதிமன்ற தீர்ப்புகளை வழங்கி வரும் நீதிமன்றம், மாணவர்களை மட்டும் அச்சமின்றி தேர்வு எழுத உத்தரவிடுகிறது என்ற வரிகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 
 
இதற்கு கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில் நடிகர் சூர்யா, ஜோதிகா, சிவக்குமார் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, நீதிபதிகளை அவதூறாக பேசியதாக நடிகர் சூர்யா, ஜோதிகா, சிவக்குமார் மீது வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்க கோரி மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் வழக்கறிஞர்கள் புகார் அளித்துள்ளனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்