இளைஞரை துரத்தி துரத்தி வெட்டிய கும்பல் – மதுரையில் பயங்கரம்

புதன், 12 ஜூன் 2019 (18:32 IST)
மதுரையில் காவல் நிலையம் அருகே இளைஞர் ஒருவரை மர்ம கும்பல் ஒன்று ஓட ஓட துரத்தி வெட்டி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் உள்ள செல்லூர் பகுதியை சேர்ந்தவர்கள் அஜித் மற்றும் ரஞ்சித். சகோதரர்களான இவர்களுக்கு தினேஷ் என்ற நண்பரும் இருந்திருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு தினேஷுடன் இவர்களுக்கு சண்டை ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சகோதரர்கள் தினேஷின் கையை அரிவாளால் வெட்டியுள்ளனர்.

இதுகுறித்து தல்லாக்குளம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பெயிலில் இருக்கும் இரு சகோதரர்களும் கையெழுத்து போட தல்லாகுளம் காவல் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தபோது முகத்தில் துணியை மூடிக்கொண்டு மர்ம நபர்கள் சிலர் பயங்கரமான ஆயுதங்களோடு சுற்றிவளைத்தனர். உயிருக்கு பயந்த இரு சகோதரர்களும் தெரித்து ஓட தொடங்கினர். துரத்தி வந்த கும்பல் அஜித்தை பலமாக தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த ரஞ்சித் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் மர்ம கும்பலை கைது செய்துள்ளனர். இதற்கும் பழைய நண்பர் தினேஷுக்கும் ஏதாவது தொடர்பிருக்கிறதா என்ற ரீதியில் விசாரித்து வருவதாக கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்