பாஜகவோடு கூட்டும் இல்லை ; அவங்க நமக்கு எதிரியும் இல்லை : எடப்பாடி மழுப்பல்

செவ்வாய், 24 ஜூலை 2018 (17:45 IST)
பாஜகவோடு அதிமுக கூட்டு வைத்திருக்கவில்லை என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். 

 
சென்னை அடுத்துள்ள வண்டலூரில் உள்ள உயிரியல் பூங்காவில் நடைபெற்ற விழாவில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார். அப்போது, பிறந்து ஆறு மாதங்களான பெண் சிங்கத்திற்கு ஜெயா என பெயர் வைத்தார்.
 
விழா முடிந்ததும் செய்தியாளர்களை அவர் சந்தித்தார். அப்போது நிருபர்கள் எழுப்பிய பல கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். தமிழகத்திற்கு மூன்று டி.எம்.சி தண்ணீரை தர மறுத்த கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டினால் நமக்கு தண்ணீர் தருவார்கள் என எப்படி நம்புவது?. ஓ.பி.எஸ் அவரின் சகோதரர் உடல் நிலை சரியில்லாத நேரத்தில் அவரை சென்னை கொண்டு வர உடனடியாக விமானம் ஏற்பாடு செய்து தந்த மத்திய அமைச்சர்களுக்கு நன்றி கூற சென்றுள்ளார். பாராளுமன்ற தேர்தலுக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். கூட்டணி குறித்து தேர்தல் நடத்தில்தான் முடிவு செய்யப்படும் எனக்கூறினார்.
 
ஜெயலலிதா இருந்திருந்தால் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் முடிவு வேறு மாதிரி இருந்திருக்கும் என பல மாநில முதல்வர் கருத்து தெரிவித்துள்ளனரே என்ற கேள்விக்கு பதிலளித்த அவர் “அவர்கள் கூறுவது பற்றி நாம் கவலை கொள்ள தேவையில்லை. மத்திய அரசோடு இணக்கமாக உறவு வைத்திருக்க வேண்டும் என்றுதான் விரும்புகிறோம். 

பாஜகவுடன் நாம் கூடும் கிடையாது. அவர்கள் நமக்கு எதிரியும் கிடையாது. மாநில பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்கவே அதிமுக எம்.பிக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதன் அடிப்படையிலேயே நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தோம்” என அவர் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்