கள்ளக்குறிச்சியில் கைது நடவடிக்கை தொடரும் - எஸ்.பி. பகலவன்!

புதன், 20 ஜூலை 2022 (15:39 IST)
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்ற பகலவன் இன்று, வன்முறை நிகத்தப்பட்ட பள்ளியை ஆய்வு செய்தார்.


அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இந்த வழக்கின் முழு விவரம் அடுத்தகட்ட விசாரணையில் தெரியும். தொடர்ந்து பல்வேறு இடங்களை ஆய்வு மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதன் முழு விவரத்தையும் பாதுகாப்பு கருதி தற்போது கூற இயலாது. ஆனால் நாங்கள் முன்னுரிமை கொடுப்பது, சகஜ நிலையை நீடிக்கச் செய்வதில் மட்டுமே.

இந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடி-யின் சிறப்புப் புலனாய்வு குழு, நடத்தி வருகிறது. இதனால் இந்த வழக்கின் அடுத்த கட்ட நடவடிக்கை அடுத்தடுத்து தெரியவரும். இந்த கலவரம் தொடர்பாக 300க்கும் மேற்பட்டவர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் "கைது நடவடிக்கை தொடரும். அதற்கான கட்டாயம் இருக்கிறது. இந்த கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது பல்வேறு வழிகளில் வழக்கு தொடர்ந்து வருகிறோம். அவை அனைத்தும் ஒவ்வொரு சூழலுக்கு ஏற்ப அமையும். பள்ளி மாணவி எந்த சூழலில் இறந்ததற்கான வாய்ப்பு இருக்கிறது என்பது தொடர்பாக ஆராய்ந்து வருகிறோம். இதில் மேற்கொண்டு என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பதும் உங்களுக்கு தெரியவரும்," என்றார் அவர்.

பெற்றோர் மாணவியின் உடலை வாங்க மறுப்பது ஏன் என்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், "பெற்றோருக்கு மகள் மரணம் தொடர்பாக மனக்குறை இருக்கும். அந்த இழப்பை ஈடுகட்ட முடியாது. ஆனால் இந்த விவகாரத்தில் அவர்கள் குறையைத் தொடர்பாக சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுத்து வருகின்றனர். நாங்கள் தொடர்ந்து அவர்களிடம் பேசி‌ வருகிறோம். மாணவியின் உடலை பெற்றோரிடம் ஒப்படைத்து நல்லடக்கம் செய்யும் முயற்சியை மேற்கொண்டு வருகிறோம்," என்று காவல் கண்காணிப்பாளர் கூறினார்.

தற்போது இங்கிருக்கும் சட்ட ஒழுங்கு பிரச்சனையை முழுவதுமாக சரி செய்யும் முயற்சியைச் செய்து வருகிறோம். மேலும் இந்த வழக்கு தொடர்பாக எங்கள் தரப்பில் சின்ன தரவுகளை கூட வெளியிட மாட்டோம். இதில் தடயவியல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும். அதன் பிறகே இந்த வழக்கு தொடர்பான விஷயங்களை விளக்க முடியுமென அவர் தெரிவித்தார்.

மேலும், "கைது செய்யப்பட்ட தாளாளர், செயலாளர், முதல்வர் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் மீது குற்றவியல் தண்டனை சட்டம் 306 பிரிவின் கீழ் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேற்கொண்டு விசாரணையில் என்ன நடந்தது என்பதை ஆய்வு செய்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து சிறப்புக் குழு ஆய்வு செய்து வருகிறது," என்று கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்