கடந்த சில நாட்களாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடத்தும் கூட்டங்களில் தமிழக வெற்றி கழகத்தின் கொடியுடன் அக்கட்சியின் தொண்டர்கள் பங்கேற்று வருவது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கூட்டணிக்கான பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாகவே இது பார்க்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமியும் கூட இது குறித்து, "கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போட்டு ஆகிவிட்டது" என்று கூறியதும் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், இந்த செயல்பாடு குறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் நாமக்கல் மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் மோகன் என்பவர் விளக்கமளித்துள்ளார். மாற்று கட்சியினர் நடத்தும் நிகழ்ச்சிகளில், கட்சியின் தலைவர் மற்றும் பொதுச்செயலாளரின் அனுமதி இன்றி தமிழக வெற்றி கழகத்தின் கொடியுடன் தொண்டர்கள் பங்கேற்க கூடாது என்று அவர் வலியுறுத்தி அறிவுறுத்தியுள்ளார்.
எனவே, இனிவரும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் கூட்டங்களில், தமிழக வெற்றி கழகத்தின் கொடியுடன் அக்கட்சியின் தொண்டர்கள் பங்கேற்க மாட்டார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.