அதிமுக வார்டு செயலாளர் ஓட ஓட விரட்டி கொலை.! கடலூரில் பதற்றம்..!

Senthil Velan

ஞாயிறு, 28 ஜூலை 2024 (12:23 IST)
கடலூரில் அதிமுக வார்டு செயலாளர் ஒருவர் நடு ரோட்டில் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
 
தமிழகத்தில் அரசியல் பிரமுகர்கள் கொல்லப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.  கடந்த மாதம் சேலத்தை சேர்ந்த அதிமுக பகுதி செயலாளர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து பாமக நிர்வாகி மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டது. 
 
சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டார். இதனையடுத்து மதுரையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி கொலை செய்யப்பட்டார். அந்த வரிசையில் தற்போது கடலூர் பகுதியை சேர்ந்த அதிமுக வார்டு செயலாளர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
கடலூர் நவநீதம் நகர் பகுதியை சேர்ந்தவர் பக்தா (எ) பத்மநாதன்(43).  இவர்  அதிமுக வார்டு செயலாளராக பணியாற்றி வந்தார். நேற்று இரவு புதுச்சேரி மாநிலத்தில் உள்ள திருப்பனம்பாக்கம் பகுதியில் நடைபெற்ற கோவில் கலை நிகழ்ச்சிகளை பார்த்து விட்டு இன்று காலை வீடு திரும்பியுள்ளார். 
 
அப்போது இரண்டு சக்கர வாகனத்தில் வந்த பக்தா மீது காரை மோதியுள்ளது. இதில் நிலைதடுமாறி பத்மநாதன் கீழே விழுந்துள்ளார். அப்போது காரில் இருந்து இறங்கிய மர்ம கும்பல் நடு ரோட்டில் ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டி கொலை செய்தது.  முன்விரோதம் காரணமாக கடலூர் பகுதியைச் சேர்ந்த நபர்கள் வெட்டியதாக பாகூர் போலீசார் தகவல் தெரிவித்தனர்.

ALSO READ: குமரியில் பயங்கரம்..! காங்கிரஸ் பெண் கவுன்சிலரின் கணவர் வெட்டி கொலை.!!

கொலை செய்யப்பட்ட பத்மநாதன் கடந்த ஆண்டு பாஸ்கர் என்பவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார். பாஸ்கரின் கொலைக்கு பழி வாங்கவே இந்த கொலை சம்பவம் நடைபெற்றிருக்கலாம் என போலீசார் சந்தேகித்துள்ளனர். கொலையாளிகளை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்