ரஜினியின் செல்வாக்கை மறைக்க நரிக்கணக்கு போடும் கமல்: அதிமுக நாளேடு விமர்சனம்

வியாழன், 21 நவம்பர் 2019 (09:31 IST)
ரஜினி, கமல் இணைப்பு நடக்குமா? நடக்காதா? என ஒருபக்கம் விவாதம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் இரண்டு திராவிட கட்சிகளும் இந்த இணைப்பு நடந்து விடக்கூடாது என்ற எண்ணத்தை கொண்டுள்ளன. இந்த நிலையில் அதிமுக நாளேடு ஒன்றில் ரஜினி-கமல் இணைப்பு குறித்து பதிவு செய்யப்பட்டுள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது:
 
சினிமாவில் ரஜினியோடு போட்டி போட்டு தோற்றுவிட்ட கமல், அவரை அரசியலில் தன்னோடு இணைத்து ரஜினியின் தனிச்செல்வாக்கை மறைத்துவிட நரிக்கணக்கு போடுகிறது. இதற்கு ரஜினியும் வலியச் சென்று பலிகடா ஆவேன் என்பது பரிதாபம்.
 
ஆன்மிக அரசியல் தொடங்கி 234 தொகுதிகளில் தனியாக போட்டியிடப் போவதாக அறிவித்த ரஜினி, ஆன்மிகத்துக்கு எதிரான நிலைப்பாடு கொண்டிருக்கும் கமலோடு கரம் கோர்ப்பது, எலியும் பூனையும் இணைந்து குடித்தனம் நடத்தப் போகிறேன் என்பதற்குச்சமம்
 
கமலோடு கூட்டு வைத்துக் கொண்டு அரசியலில் ஜெயிப்பேன் என்பது, வெந்த நெல்லை முளைக்க வைக்க முயலும் கோமாளி காரியம் என்பதை காலம் ரஜினிக்கு கற்பிக்கத்தான் போகிறது
 
ரஜினியின் கதாநாயகன் பீடத்தை தகர்த்தெறிய கமல் நேரம் பார்த்து காத்திருக்கும் வேளையில், ரஜினியே அந்த வாய்ப்பை வலியச் சென்று வழங்குகிறார் என்றால் சும்மாவா விடுவார் உத்தமவில்லன்
 
திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் சீடரான கமல்ஹாசனிடமிருந்து ரஜினி பெறப் போகும் பாடம் ஆறாத காயமாகும், மாறாத தழும்பாகும்
 
இவ்வாறு அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்