ஜெ.வின் உருவப்படத்திற்கு ஆதரவு - விஜயதாரணி மீது நடவடிக்கை?

செவ்வாய், 13 பிப்ரவரி 2018 (09:31 IST)
தமிழக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படம் சட்டசபையில் வைக்கப்பட்டதற்கு ஆதரவு தெரிவித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதாரணி மீது காங்கிரஸ் தலைமை நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 
மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெ.வின் உருவப்படம் சட்டபையில் அமைக்கப்படும் என கடந்த சனிக்கிழமை அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால், நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஒருவருக்கு சட்டமன்றத்தில் சிலை வைக்கக் கூடாது என திமுக, காங்கிரஸ், பாமக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால், பாஜக உள்ளிட்ட சில கட்சிகள் இதற்கு ஆதரவு தெரிவித்தன. ஜெ.வின் உருவப்படத்தை நேற்று காலை சபாநாயகர் தனபால் திறந்து வைத்தார். 
 
திமுகவும், அதன் கூட்டணி கட்சியுமான காங்கிரஸ்  எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான விஜயதாரணி ஆதரவு தெரிவித்திருந்தார். சட்டசபையில் முதல் முறையாக ஒரு பெண் தலைவர் படம் வைப்பதை தான் வரவேற்பதாகவும், சொத்து குவிப்பு வழக்கில் அவரை குற்றவாளி என உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறிய போது அவர் உயிரோடு இல்லை. எனவே, மேல் முறையீடு செய்யும் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. அவர் பல நல்ல திட்டங்களை செயல்படுத்தியவர். எனவே, இதை நான் ஆதரிக்கிறேன்” என அவர் கூறியிருந்தார். மேலும், முதல்வர், பேரவை தலைவர் ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்தும் தெரிவித்தார்.
 
இந்த விவகாரம் தமிழக காங்கிரஸ் தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி கருத்து தெரிவித்த தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசு “விஜயதாரணி கூறியது அவரின் சொந்த கருத்து. இது தொடர்பாக அவரிடம் விசாரணை செய்யப்படும். அவரின் நடவடிக்கை குறித்து கட்சி தலைமையின் கவனத்திற்கு கொண்டு செல்வோம்” எனக் கூறியுள்ளார்.
 
எனவே, விஜயதாரணி மீது விரைவில் நடவடிக்கை பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்