ஒருநாள் தகவல் பெறும் உரிமைச்சட்ட பயிற்சி வகுப்பு!.

திங்கள், 10 ஏப்ரல் 2023 (10:45 IST)
கோவையில் நடைபெற்ற ஒரு நாள் தகவல் பெறும் உரிமைச்சட்ட பயிற்சி வகுப்பில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு பயனடைந்தனர். 
 
கோவை இராமநாதபுரம் பகுதியில் உள்ள CSI துவக்கப்பள்ளியில் கோவை மாவட்ட RTI ஆர்வலர்கள் சார்பில் இன்று ஒருநாள் தகவல் பெறும் உரிமைச்சட்ட பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது. இந்த பயிற்சி வகுப்பில் மதுரை RTI ஹக்கீம் பங்கேற்று தகவல் பெறும் உரிமை சட்டத்தின் வரலாறு, மனு எழுதும் முறை, அதிலுள்ள பிரிவுகள், மேல் முறையீடு வழிமுறைகள், தகவலை எவ்வாறு பெறுவது, பெறப்பட்ட தகவல்களை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து பயிற்சி அளித்தார். 
 
இந்த பயிற்சி வகுப்பில் கோவை, திருப்பூர், ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பல்வேறு பொதுமக்கள் கலந்து கொண்டு தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து தெரிந்து கொண்டனர். மேலும் பொதுமக்களின் பல்வேறு சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் சமூக ஆர்வலர் ஆண்டனி தலைமை வகித்தார். மேலும் இந்நிகழ்வில் வாமன், டோனிசிங், கோபால், தியாகராஜன் தண்டபாணி உட்பட பலர் கலந்து கொண்டனர். 
 
இந்நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த ஹக்கீம், இந்த பயிற்சி வகுப்பில் கோவை திருப்பூர் ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் RTI சட்டத்தில் மனு எழுதிய போது அந்த மனுவிற்கு சரியாக பதில்கள் தராத கோவை மாவட்டத்தை சேர்ந்த பொது தகவல் அலுவலர்களை கண்டித்து நாளை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் தகவல் ஆணையத்தில் ஐந்து மாதத்திற்கு மேலாக பணி நியமனம் இல்லாமல் காலியாக இடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்