மனைவிக்கு வீட்டிலே பிரசவம் பார்த்த என்ஜினியர்

சனி, 4 ஆகஸ்ட் 2018 (10:02 IST)
திருப்பூர் சம்பவத்தையே மறக்கமுடியாத மக்கள் தேனியில் நபர் ஒருவர் தன் மனைவிக்கு பிரசவம் பார்த்தது பலரை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.
திருப்பூரில் ‘யூடியூப்’ வீடியோவை பார்த்து வீட்டிலேயே சுகப்பிரசவத்துக்கு முயற்சி செய்த தனியார் பள்ளி ஆசிரியை கிருத்திகா அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு உயிரிழந்தார். இது நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 
இதனையடுத்து சுகப்பிரசவம் குறித்த பயிற்சிக்காக விளம்பரம் செய்த ஹீலர் பாஸ்கர் என்பவரை போலீஸார் அதிரடியாக கைது செய்தனர்.
இந்நிலையில் தேனியை சேர்ந்த என்ஜினியரான கண்ணன் தனது மனைவி மகாலட்சுமிக்கு தானே வீட்டில் சுகப்பிரசவம் பார்த்துள்ளார். அவர்களுக்கு அழகிய ஆண் குழந்தை ஒன்றும் பிறந்துள்ளது.
 
இதனையறிந்த மருத்துவத்துறையினர் 2 ஆம்புலன்சுடன் அவரது வீட்டிற்கு சென்று நீங்கள் செய்தது தவறு என கண்ணனிடம் தெரிவித்துள்ளனர். இதனை ஏற்க மறுத்த கண்ணன் குடும்பத்தினர், அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
மேலும் அவர்கள் குழந்தையின் தொப்புள் கொடியையும் அகற்றாமல் இருந்துள்ளனர். மருத்துவர்கள் குழந்தையின் தொப்புள் கொடியை அகற்றுமாறு கூறியுள்ளனர். தொப்புள் கொடி தானாக விழுந்துவிடும் என கண்ணன் குடும்பத்தார் கூறியுள்ளனர். 
மருத்துவர்களின் தொடர் வற்புறுத்தலுக்கு பிறகு  கண்ணனின் தந்தை நீங்கள் எல்லாம் தொப்புள் கொடியை அகற்றக் கூடாது சித்த மருத்துவர்கள் தான் தொப்புள் கொடியை அகற்ற வேண்டும் என கூறியுள்ளனர். விரைந்து வந்த அவர்கள் தொப்புள் கொடியை அகற்றினர்.
 
இதனையடுத்து மருத்துவர்களை வேலை செய்ய விடாத குற்றத்திற்காக போலீஸார் கண்ணனின் தந்தையை கைது செய்து அழைத்துச் சென்றனர். மேலும் போலீஸார் கண்ணன் மற்று அவரது தாயார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்