தொல்லையான காதல்.. விஷம் குடித்த பெண் – ஊட்டியில் பரிதாபம்

செவ்வாய், 30 ஜூலை 2019 (20:03 IST)
தனது காதலை ஏற்றுக்கொள்ளாவிட்டால் காதலன் இறந்து விடுவதாக மிரட்டியதால் மனமுடைந்த பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஊட்டியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் புளியங்குளம் பகுதியை சேர்ந்தவர் பிரியதர்ஷினி. ஊட்டியில் உள்ள விடுதியில் தங்கியபடி அங்குள்ள நீதிமன்றத்தில் தட்டச்சு பணியாளராக பணியாற்றி வருகிறார். விடுமுறை நாட்களில் பெற்றோரை சந்திக்க ஊருக்கு போய்விட்டு வருவார். இந்த முறையும் அதேபோல சென்று வந்திருக்கிறார். அவருடைய விடுதி தோழி உள்ளே வந்து பார்த்தபோது வாயில் நுரை தள்ள பிரிய தர்ஷினி வீழ்ந்து கிடந்திருக்கிறார்.

உடனே அவரை மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த போலீஸார் விசாரணையை தொடங்கியிருக்கிறார்கள். பிரியதர்ஷினி தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு ஒரு ஆணுடன் பேசி வந்திருக்கிறார். போலீஸார் அதை பற்றி விசாரித்தபோது உண்மைகள் தெரிய வந்துள்ளன.

பிரியதர்ஷினி புளியங்குளத்தில் இருந்தபோது அவரை பெண் பார்க்க ஒரு குடும்பத்தினர் வந்துள்ளனர். ஏதோ காரணத்தால் அவர்கள் சரியான பதிலை சொல்லாமல் இருந்திருக்கிறார்கள். ஆனால் அந்த நபர் பிரியதர்ஷினியோடு போனில் பேசி வந்திருக்கிறார். இந்நிலையில் பிரியதர்ஷினி வீட்டில் வேறு வரன் பார்க்க தொடங்கியுள்ளனர். இது தெரிந்த அந்த நபர் “நீ இல்லாவிட்டால் நான் இறந்துவிடுவேன்” என கூறியுள்ளார். இவரையும் மறுக்க முடியாமல், குடும்பத்திடமும் பேச முடியாமல் குழப்பத்தில் தவித்த பிரியதர்ஷினி கடைசியாக தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து போலீஸார் மேலும் பல இடங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்