கடம்ப வனேஸ்வரர் கோயிலில் 48 வது நாள் மண்டலாபிஷேகத்தில் 108 கலச அபிஷேகமும் 108 சங்காபிஷேகமும் நடைபெற்றது!

J.Durai

வெள்ளி, 30 ஆகஸ்ட் 2024 (09:45 IST)
கரூர் மாவட்டம், குளித்தலையில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது .
இக்கோவில் 1800 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாலகுஜாலாம்பிகை உடனுறை கடம்பவனேஸ்வரர் கோயில்  வான்பொய்யினும் தான் பொய்யா வற்றாத காவிரியின் தென்கரையில் குபேர திசையெனும் வடக்கு நோக்கி அமைந்துள்ளது.
 
கடம்ப மரங்கள் நிறைந்த பகுதியில் சிவபெருமான் சுயம்பு லிங்க மூர்த்தியாக எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார்.
 
காசி திருத்தலப் பெருமையை காட்டினும் விஞ்சிய அருள் வழங்கும் சிறப்பினை  பெற்றது மாகவும், காவிரிக்கு தென்கரையில் இரண்டாவது தேவாரப் பாடல் பெற்ற தலமாகவும்,
அப்பர், அருணகிரியார்,  ஐய்யடிகள்,  காடவர்கோன் போன்ற அருளாளர்களால் பாடப்பட்ட திருத்தலமாகவும்  விழங்கும் இக்கோயிலில் பாலகுஜலாம்பிகை எனும் 
முற்றிலா முலையம்மை உடனுறை அருள்மிகு  கடம்பவனேஸ்வரர்  காலைக்கடம்பர் எனும் வழிபாட்டு சிறப்பு மிக்கவராக   பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.
 
மேலும் பிரம்மதேவர் அக்னி தீர்த்தம் அமைத்து வழிபட்டதும், மகாவிஷ்ணு வேதங்களை மீட்க சிவபெருமானை வழிபட்டதும், முருகப்பெருமானது ஊமைத்தன்மையை நீக்கியதும் அகத்தியர் கண்ணுவ முனிவர் ஆகியோர்களால் வழிபாடு செய்யப்பட்ட சிறப்பு வாய்ந்த தலமாகவும் உள்ளது.
 
இந்த ஆலயம் அமைந்துள்ள பகுதியானது குபேரபுரி, பிரம்மபுரி ஞானபுரி,கந்தபுரி தட்சிண காசி, கடம்பந்துறை என பல பெயர்களால் அழைக்கப்பட்டு வருகிறது.
 
இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இக்கோவிலை புனரமைத்து கும்பாபிஷேக விழா நடத்துவதற்காக கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு பாலாலயம் செய்யப்பட்டு, புனரமைப்பு பணிகள் நடைபெற்று கடந்த ஜூலை மாதம் 12ஆம் தேதி அதி விமர்சையாக மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. 
 
இன்று காலை 48 வது நாள்  மண்டலாபிஷேகத்தயொட்டி விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் கடம்பவனேஸ்வரர் (மூலஸ்தானம்) ஆகிய பரிவார தெய்வங்களுக்கு 108 கலச அபிஷேகமும் நடைபெற்றது.
 
தொடர்ந்து முற்றில்லாம் முலையம்மனுக்கு 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. 
சிவாச்சாரியார்கள் யாக குண்டத்தில் வேத மந்திரங்கள் முழங்க சுவாமிகளுக்கு அபிஷேக ஆராதனையும்,, தீபாரதனையும் நடைபெற்றது. 
 
இந்த மண்டல பூஜையில் குளித்தலை சுற்று பகுதி கிராமத்தைச் சேர்ந்த பக்தர்கள் சிவனடியார்கள். கோவில் புரவலர்கள் பலர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். 
 
பக்தர்களுக்கு அன்னதானமும் பிரசாதமும் வழங்கப்பட்டது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்