தலைத் தூக்குகிறதா பெண் சிசுக்கொலை? கனத்த மனதுடன் ஸ்டாலின் டிவிட்!

வெள்ளி, 6 மார்ச் 2020 (14:13 IST)
பிறந்த பெண் குழந்தையைப் பெற்றோரே கொன்று புதைத்திருப்பது இதயம் உள்ளோர் அனைவரையும் பதற வைக்கிறது என ஸ்டாலின் டிவிட். 
 
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் உசிலம்பட்டி பகுதியில் பெண் குழந்தைகள் பிறந்தால் உயிரோடு புதைப்பது, கள்ளிப்பால் கொடுத்து கொலை செய்வதுமான செயல்கள் நடந்து வந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்ததன் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக இந்த பிரச்சனை இல்லாமல் இருந்தது. 
 
இந்நிலையில், பெண் சிசுக்கொலை மீண்டும் தலைத்தூக்கியுள்ளதாக தெரிகிறது. உசிலம்பட்டி பகுதியின் அருகில் உள்ள புள்ளனேரி என்ற பகுதியைச் சேர்ந்த வைரமுருகன் -சௌமியா தம்பதியினருக்கு பிறந்த பெண் குழந்தையை உயிரோடு புதைக்கப்பட்டது தெரியவந்துள்ளது. 
இதனையடுத்து போலீஸார் குழந்தையின் பெற்றோர் மற்றும் குழந்தையின் தாத்தா ஆகிய மூவர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர். இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் பதிவிட்டதாவது, மதுரை மாவட்டம் புள்ளநேரியில் 2-வதாகப் பிறந்த பெண் குழந்தையைப் பெற்றோரே கள்ளிப்பால் ஊற்றிக் கொன்று புதைத்திருப்பது இதயம் உள்ளோர் அனைவரையும் பதற வைக்கிறது.
 
கண்டனத்திற்குரிய இச்செயலில் ஈடுபட்டோர், துணைநின்றோர் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். தமிழகம் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற மாநிலமாகி வரும் நிலையில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாள் கொண்டாடும் ஆட்சியாளர்கள் ஏட்டளவில் இல்லாமல் நடைமுறையில் பெண்சிசுக்களை பாதுகாக்க வேண்டும் என அரசுக்கும் கோரிக்கை வைத்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்