பழைய தண்ணீர் தொட்டியை புதுப்பிக்கும் போது இருவர் பலி: என்ன நடந்தது?

வெள்ளி, 29 ஜனவரி 2021 (09:46 IST)
கிருஷ்ணகிரியில் பழைய தண்ணீர் தொட்டியை புதுப்பிக்கும்போது விஷவாயு தாக்கியதில் 2 தொழிலாளர்கள் பலியாகினர். 

 
தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த சரஸ்வதி என்பவர் கிருஷ்ணகிரி ஆனந்த் நகர் பகுதியில் உள்ள பழைய வீடு ஒன்றை வாங்கி அதனை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் வீட்டில் உள்ள பழைய தண்ணீர் தொட்டியை புதுப்பிக்கும் பணியில் கீழ் புதூர் கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் வெங்கடாஜலபதி, முருகன் மற்றும் சத்யசாய் நகர் பகுதியைச் சேர்ந்த பெரியசாமி ஆகிய மூவரும் ஈடுபட்டிருந்தனர். 
 
10 அடி அகலமும் 12 அடி உயரமும் கொண்ட இந்த தண்ணீர் தொட்டிக்குள் தொழிலாளர்கள் மூன்று பேரும் இறங்கிய நிலையில் ஒருவர் பின் ஒருவராக மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர். இதனையடுத்து அங்கு இருந்தவர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.
 
பின்னர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தண்ணீர் தொட்டிக்குள் மயங்கிக் கிடந்த 3 பேரையும் வெளியில் எடுத்து முதலுதவி கொடுக்கையில் தண்ணீர் தொட்டிக்குள் விஷவாயு தாக்கி மூச்சு திணறல் ஏற்பட்டதில் பெரியசாமி மற்றும் முருகன் உயிரிழந்து விட்டது தெரியவந்தது. தொடர்ந்து ஆபத்தான நிலையில் இருந்த வெங்கடாஜலபதி மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளார்.
 
தண்ணீர் தொட்டிக்குள் மூச்சு திணறி இரண்டு பேர் பலியான சம்பவம் தொடர்பாக கிருஷ்ணகிரி தாலுக்கா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்