அமைச்சரின் செல்போன் திருட்டு ; நயன்தாராவை காட்டி திருடனை பிடித்த பெண் போலீஸ் அதிகாரி

சனி, 23 டிசம்பர் 2017 (12:11 IST)
அமைச்சரின் செல்போனை வைத்திருந்த திருடனை நயன்தாரா புகைப்படத்தை அனுப்பி,  மயக்கி, கையும் களவுமாக பிடித்த பெண் போலீஸ் அதிகாரியை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

 
பிகாரில் பாஜகவை சேர்ந்த அமைச்சராகவும், பாஜக தலைவராகவும் இருப்பவர் சஞ்சய் குமார் மஹதோ. இவரின் விலைமதிப்புடைய செல்போன் சமீபத்தில் காணாமல் போனது. எனவே இதுகுறித்து தர்பங்கா மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த பகுதி பாட்னாவில் இருந்து 150 கி.மீ தூரத்தில் இருக்கிறது.
 
போலீசாரின் விசாரணையில் இந்த செல்போன், மொகமது ஹாஸ்னைன் என்ற கொள்ளையனிடம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே, அவனை பிடிக்க பீகார் போலீசார் பலமுறை முயன்றும், அவன் தப்பித்துக் கொண்டே இருந்துள்ளான். எனவே, இந்த பணி உயர் போலீஸ் அதிகாரியான மதுபாலா தேவியிடம் ஒப்படைக்கப்பட்டது. 
 
கொள்ளையனை பிடிக்க திட்டமிட்ட மதுபாலா ஒரு நூதனமான வழியை தேர்ந்தெடுத்தார். அதன்படி, மொகம்மதுவின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு அடிக்கடி பேசி வந்தர். மேலும், அவரை காதலிப்பதாகவும் கூறியுள்ளார். தொடக்கத்தில் ஆர்வம் காட்டாத மொகமது மதுபாலாவிடம் அவரின் புகைப்படத்தை அனுப்புமாறு கேட்டுள்ளான். தன்னுடைய புகைப்படத்திற்கு பதில் நடிகை நயன்தாராவின் புகைப்படத்தை மதுபாலா அனுப்பியுள்ளார். 
 
நயன்தாராவின் அழகில் மயங்கிய மொகம்மது, மதுபாலாவை நேரில் சந்திக்க விருப்பம் தெரிவித்தான். அதன் படி அவனை தர்பாங்கா எனும் இடத்திற்கு வரவழைத்த மதுபாலா, சில போலீஸ் அதிகாரிகளின் உதவியுடன் அவனை கையும் களவுமாக பிடித்து, அவனிடமிருந்து பாஜக அமைச்சரின் செல்போனை பறிமுதல் செய்தார்.
 
திருடனை பிடிக்க நூதனமான திட்டத்தை வகுத்து, அதில் வெற்றியும் பெற்ற மதுபாலாவை உயர் போலீஸ் அதிகாரிகள் பாராட்டி வருகின்றனர்.
 
பாவம்! பிகாரை சேர்ந்த அந்த கொள்ளையனுக்கு நயன்தாரா ஒரு நடிகை என்பது தெரியாது போல....

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்