முதல்வர் வேட்பாளர் யாராக இருந்தாலும் ஏற்க தயார்: உத்தவ் தாக்கரே அறிவிப்பு..!

Mahendran

புதன், 9 அக்டோபர் 2024 (11:14 IST)
மகாராஷ்டிரா மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கின்ற நிலையில், காங்கிரஸ் மற்றும் சரத் பவார் அறிவிக்கும் முதல்வர் வேட்பாளரை ஏற்றுக்கொள்ளத் தயார் என்றும், யார் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படுகிறார்களோ அவர்களுக்கு ஆதரவளிக்கத் தயார் என்றும் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, தங்கள் கட்சிக்கு முதல்வர் பதவி வழங்கப்பட வேண்டும் என்று உத்தவ் தாக்கரே வலியுறுத்திய நிலையில், ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் வெற்றி பெற்றாலும், ஹரியானாவில் தோல்வி அடைந்ததை அடுத்து தங்களின் முடிவை மாற்றிக் கொண்டதாக கூறப்படுகிறது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி மற்றும் முதல்வர் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கூட்டணி உள்ளது. அதேபோல் காங்கிரஸ் மற்றும் உத்தவ் தாக்கரே தலைமையிலான கூட்டணி உருவாக உள்ளது. இதில் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியையும், சில அரசியல் கட்சிகளையும் இணைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த முறை எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு வெற்றியின் வாய்ப்பு அதிகம் என்று கூறப்படும் நிலையில், முதல்வர் வேட்பாளர் பிரச்சினையால் வெற்றியை இழக்கக் கூடாது என்பதற்காக உத்தவ் தாக்கரே முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் இறங்கி வந்துள்ளதாக தெரிகிறது.

மகாராஷ்டிரா மாநிலத்தை காப்பது தான் மிக முக்கியம் என்றும், காங்கிரஸ் அல்லது தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் அறிவிக்கும் முதல்வர் வேட்பாளரை ஏற்றுக்கொள்ளத் தயார் என்றும் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். இதனை எதிர்க்கட்சிக் கூட்டணி வரவேற்றுள்ள நிலையில், முதல்வர் வேட்பாளர் அதிகாரபூர்வமாக விரைவில் அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்