ராஜஸ்தான் மாநிலத்தில், 53,749 பியூன் பணியிடங்களுக்கு 24.76 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாகவும், இதில் எம்பிஏ, பிஎச்டி படித்தவர்களும் விண்ணப்பித்து உள்ளதாகவும் வெளியான செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வேலைக்கு விண்ணப்பித்தவர்களில், முனைவர் பட்டம் (PhD), எம்.பி.ஏ., மற்றும் சட்டப் படிப்பு முடித்தவர்கள் பலர் அடங்குவர். குறைந்த சம்பளம் கொண்ட வேலைகளுக்குக்கூட, உயர்கல்வித் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிப்பது, நாட்டில் நிலவும் கடுமையான வேலையில்லாத் திண்டாட்டத்தைக் காட்டுகிறது.
ஏராளமானோர் விண்ணப்பித்ததால், இணையதளம் முடங்கியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் வேலை இல்லாமல் பெற்றோரை சார்ந்திருப்பதை காட்டிலும், குறைந்தபட்ச வருமானம் தரும் வேலையாவது கிடைத்தால் போதும் என்ற மனநிலையிலேயே பலர் விண்ணப்பித்துள்ளனர். இதனால், விண்ணப்ப இணையதளம் ஒரே நேரத்தில் ஏராளமானவர்களால் பயன்படுத்தப்பட்டு முடங்கியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கிய இந்த விண்ணப்ப செயல்முறை, தற்போது விண்ணப்பித்தவர்களின் கல்வித் தகுதிகள் குறித்த தகவல்கள் வெளியானதால், நாடு முழுவதும் பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது.