விமான விபத்து விசாரணையில் உதவ வந்த ஐ.நா குழு! மறுத்த இந்தியா! - என்ன காரணம்?

Prasanth K

வெள்ளி, 27 ஜூன் 2025 (11:58 IST)

அகமதாபாத் விமான விபத்தில் விசாரணைக்கு ஐ.நா தங்கள் குழுவை அனுப்ப விரும்பிய நிலையில் அதற்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது.

 

கடந்த 12ம் தேதி அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்டு சென்ற ஏர் இந்தியா விமானம் (போயிங் 787 ட்ரீம்லைனர்) விபத்துக்கு உள்ளானதில் 241 பேர் பலியானார்கள். உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த விமான விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

விமானத்தில் கருப்பு பெட்டி கண்டறியப்பட்ட நிலையில் அதில் உள்ள தரவுகளை பெற முடியாததால் அவற்றை மீட்க அமெரிக்காவிற்கு ப்ளாக் பாக்ஸ் அனுப்பப்பட்டது. அதில் தரவுகள் மீட்கப்பட்டுள்ளதாகவும், விசாரணை நடந்து வருவதாகவும் விமானத்துறை அதிகாரிகள் கூறியிருந்தனர்.

 

இந்நிலையில் இந்த விசாரணையில் உதவ ஐநா தனது சர்வதேச சிவில் விமான போக்குவரத்து அமைப்பை இந்தியாவிற்கு அனுப்புவதாக இந்தியாவிடம் தெரிவித்தது. பொதுவாக இதுபோன்ற விமான விபத்துகளின்போது அந்தந்த நாடுகள் விசாரணையில் உதவி கேட்டால் மட்டுமே ICAO அனுப்பப்படும். ஆனால் இந்த விபத்தில் ஐ.நாவே முன்வந்து இந்த உதவியை வழங்குவதாக சொன்ன நிலையில் அதை இந்தியா மறுத்துள்ளது.

 

மேலும் இந்திய விமானத்துறை அதிகாரிகள் இந்த விசாரணையை திறம்பட நடத்தி வருவதாகவும், விமான விபத்திற்கான காரணங்கள் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்