வெளிமாநில தொழிலாளர்களுடன் கிளம்பியது முதல் ரயில்!

வெள்ளி, 1 மே 2020 (11:38 IST)
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாடு முழுவதும் மார்ச் 24ஆம் தேதி முதல்கட்ட ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனை அடுத்து ஏப்ரல் 14ஆம் தேதி இரண்டாம் கட்ட ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பதும் இந்த ஊரடங்கு உத்தரவு நாளை மறுநாள் மே 3ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வெளிமாநிலத்தில் உள்ள தொழிலாளர்கள் அனைவரும் அவர்களது சொந்த மாநிலத்திற்கு, சொந்த ஊருக்கு செல்ல வழிவகை செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியது என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் தற்போது ஊரடங்கு உத்தரவால் வெளிமாநிலத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களுடன் முதல் ரயில் கிளம்ப தொடங்கியுள்ளது. தெலுங்கானாவில் உள்ள லிங்கம்பள்ளி என்ற பகுதியில் தவித்து வந்த ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 1,200 தொழிலாளர்கள் இன்று தங்கள் சொந்த ஊருக்கு ரயிலில் புறப்பட்டனர். ஊரடங்கு உத்தரவுக்கு பின் கிளம்பும் முதல் ரயிலான இந்த ரயிலில் வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்ப தொடங்கியது மற்ற மாநிலத்தில் உள்ள புலம்பெயர்ந்தவர்களுக்கு நம்பிக்கையை அளித்துள்ளது
 
விரைவில் தமிழகம் உள்பட மற்ற அனைத்து மாநிலத்தில் உள்ள வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு ரயில்கள் மூலம் செல்ல உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பணிகள் முடிந்தவுடன் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்