பாலியல் வழக்கில் சிக்கிய ரேவண்ணாவை காப்பாற்றுகிறது மத்திய அரசு ..! கர்நாடக முதல்வருக்கு ராகுல் காந்தி கடிதம்..!

Senthil Velan

சனி, 4 மே 2024 (14:14 IST)
ஆபாச வீடியோ வழக்கில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணாவை மத்திய அரசு  காப்பாற்றுவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். 
 
முன்னாள் பிரதமர் தேவகவுடா பேரன் பிரஜ்வலின் ஆபாச வீடியோ விவகாரம் தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு ராகுல்காந்தி கடிதம் எழுதியுள்ளார்.  அதில், ஹாசனில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரால் கட்டவிழ்த்து விடப்பட்ட கொடூரமான பாலியல் வன்முறை குறித்து உங்களுக்கு எழுதுகிறேன் என்றும் பிரஜ்வல் ரேவண்ணா பல ஆண்டுகளாக நூற்றுக்கணக்கான பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து படம் பிடித்தார் என்றும் தெரிவித்துள்ளார்.
 
அவரை அண்ணனாகவும், மகனாகவும் பார்த்த பலர் மிகக் கொடூரமான முறையில் கொடுமைப்படுத்தப்பட்டு அவர்களின் கண்ணியத்தைப் பறித்தனர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். நம் தாய்மார்கள் மற்றும் சகோதரிகள் பலாத்காரம் செய்யப்படுவது கடுமையான தண்டனைக்கு உத்தரவாதம் அளிக்கிறது என்றும் பிரஜ்வல் ரேவண்ணாவை மத்திய அரசு வேண்டுமென்றே இந்தியாவை விட்டு தப்பிச் செல்ல செய்துள்ளது என்றும் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

ஹரியானாவில் உள்ள  மல்யுத்த வீரர்கள் முதல் மணிப்பூரில் உள்ள எங்கள் சகோதரிகள் வரை, இதுபோன்ற குற்றவாளிகளுக்கு பிரதமரின் மறைமுக ஆதரவின் சுமையை இந்தியப் பெண்கள் சுமந்து வருகின்றனர் என்று அவர் கடுமையாக சாடியுள்ளார். 

இந்தப் பின்னணியில் நமது தாய், சகோதரிகளுக்கு நீதி கிடைக்கப் போராடுவது காங்கிரஸ் கட்சிக்கு தார்மீகக் கடமை என்று தெரிவித்துள்ள ராகுல், பிரஜ்வல் ரேவண்ணாவால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

ALSO READ: ஏற்காடு விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் வழங்குக.! தமிழக அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்.!!
 
குற்றங்களுக்கு காரணமான அனைத்து தரப்பினரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டிய கூட்டு கடமை தங்களுக்கு உள்ளது என்றும் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றவும், குற்றவாளிகளை விரைவில் தண்டிக்கவும் உறுதியான நடவடிக்கை எடுக்குமாறும் கர்நாடக முதல்வருக்கு ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்