புலிகள் இல்லை, பாதுகாப்பும் தேவையில்லை – சுப்பிரமணிய சுவாமி!

புதன், 20 நவம்பர் 2019 (18:35 IST)
விடுதலை புலிகள் இல்லாததால் சோனியா காந்தி குடும்பத்துக்கு பாதுகாப்பு தேவையில்லை என சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளார்.

சோனியா காந்தி மற்றும் அவர் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு பாதுகாப்பு படை பாதுகாப்பை மத்திய அரசு ரத்து செய்தது. பதிலாக மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பு அவர்களுக்கு வழங்கப்பட்டது.

இதற்கு காங்கிரஸ் பிரமுகர்கள் பலரும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்திருந்தனர். மக்களவையிலும் காங்கிரஸ் மற்றும் திமுக எம்.பிக்கள் இதுகுறித்து கேள்வியெழுப்பினர். காங்கிரஸ் தலைவர்கள் பாதுகாப்பில் அரசு அலட்சியம் காட்டுவதாக தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.

காங்கிரஸ் தரப்பின் இந்த வாதத்துக்கு மக்களவையில் எதிர்ப்பு தெரிவித்த பாஜக உறுப்பினர் சுப்பிரமணிய சாமி ”விடுதலைப்புலிகள் தற்போது இல்லாததால் சோனியா குடும்பத்துக்கு முன்பு இருந்த அச்சுறுத்தல் இப்போது இல்லை. அதனால் சிறப்பு பாதுகாப்பு படையின் பாதுகாப்பும் அவர்களுக்கு தேவையில்லை” என்று கூறினார்.

மேலும் அரசியல் தலைவர்கள் பாதுகாப்பில் மத்திய அரசு ஆராய்ந்தே முடிவுகள் எடுத்து வருவதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்