உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜ் நகரில் நடைபெறும் கும்பமேளாவிற்கு செல்ல வயதான தாயரை வீட்டில் பூட்டி வைத்துவிட்டு, அவரது மகன் குடும்பத்தோடு சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர், தனது வயதான தாயரை வீட்டுக்குள் பூட்டி வைத்துவிட்டு, மனைவி மற்றும் குழந்தைகளுடன் கும்பமேளா பயணம் மேற்கொண்டதாக கூறப்படுகிறது. வீட்டிற்குள் இரண்டு நாட்களாக இருந்த 68 வயது மூதாட்டி, பசியால் வாடியதாகவும், வீட்டில் உணவு எதுவும் இல்லாததால் பிளாஸ்டிக் கவர்களை சாப்பிட முயன்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினரும் உடனடியாக கதவை உடைத்து, அந்த மூதாட்டியை மீட்டு, அவருக்கு உணவு மற்றும் தண்ணீர் வழங்கினர்.
இது தொடர்பாக, மூதாட்டியின் பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கும்பமேளாவில் இருந்து அவரது மகன் திரும்பியவுடன், அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.