சிறுமி வன்கொடுமை, கொலை! கும்பமேளா சென்ற குற்றவாளி! சேஸ் செய்து பிடித்த போலீஸ்!

Prasanth Karthick

வியாழன், 20 பிப்ரவரி 2025 (13:23 IST)

மத்திய பிரதேசத்தில் பல்வேறு வன்கொடுமை குற்றங்களில் மரண தண்டனை பெற்ற நபர் விடுதலையாகி வந்து மற்றுமொரு சிறுமியை கெடுத்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

மத்திய பிரதேசத்தின் டாப்ரிபுரா என்ற பகுதியில் வசித்து வந்தவன் ரமேஷ் சிங். இவன் கடந்த 2003ம் ஆண்டில் ஷாஜாபூரில் 5 வயது சிறுமியை வன்கொடுமை செய்த குற்றத்தில் முதன்முதலில் கைது செய்யப்பட்டுள்ளான். 10 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற ரமேஷ் சிங் 2013ல் விடுதலையான நிலையில், 2014ம் ஆண்டில் 8 வயது சிறுமியை கடத்தி வன்கொடுமை செய்துள்ளான்.

 

இந்த வழக்கில் ரமேஷ் சிங்கிற்கு மரண தண்டனை அறிவிக்கப்பட்ட நிலையில் 2019ம் ஆண்டு மரண தண்டனை ரத்தாகி வெளியே வந்துள்ளான். இந்நிலையில் பிப்ரவரி முதல் வாரத்தில் ராஜ்கர் மாவட்டத்தில் வசித்து வந்த 11 வயதான பேச முடியாத, காது கேளாத சிறுமியை கடத்தி வன்கொடுமை செய்துள்ளான் ரமேஷ் சிங். 

 

அடர்ந்த காட்டில் பலத்த காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார். இதுதொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு அங்குள்ள பல சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில் ரமேஷ் சிங் அந்த பகுதியில் அதிகம் நடமாடியது தெரிய வந்துள்ளது.

 

தொடர்ந்து ரமேஷ் சிங் எங்கே சென்றான் என தேடியதில், ப்ரயாக்ராஜில் நடக்கும் கும்பமேளாவில் நீராட சென்றுள்ளான் என தெரிய வந்துள்ளது. அதை தொடர்ந்து அவன் ஜெய்ப்பூர் செல்லும் ரயிலில் வருவதாக அறிந்த போலீஸார் ரயில் நிலையத்தில் 400க்கும் மேற்பட்டவர்களை சோதனை செய்து ரமேஷ் சிங்கை கைது செய்துள்ளனர். அதன்பின்னர்தான் ஏற்கனவே ரமேஷ் சிங் இப்படியாக பல பாலியல் வன்கொடுமைகளை முன்னரே செய்திருந்தது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்