ஸ்மார்ட் வாட்சை அடுத்து ஸ்மார்ட் மோதிரங்கள்.. சாம்சங் கேலக்ஸி அறிமுகம்..!

Mahendran

வியாழன், 17 அக்டோபர் 2024 (17:25 IST)
ஸ்மார்ட் வாட்சை அடுத்து பயனர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட் மோதிரங்கள் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளன. 
 
சர்வதேச சந்தையில் முன்னதாகவே வெளியான இந்த ஸ்மார்ட் மோதிரங்கள், தற்போது இந்திய சந்தையிலும் அறிமுகமாகியுள்ள நிலையில், இந்த வாரம் முதல் முன்பதிவுகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 தென்கொரிய நிறுவனமான சாம்சங், தனது புதிய தயாரிப்பான கேலக்ஸி ஸ்மார்ட் மோதிரங்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
 
சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட் போன்களும், ஸ்மார்ட் வாட்ச்களும் போல, இப்போது கேலக்ஸி ஸ்மார்ட் மோதிரங்களும் வெளியிடப்பட்டுள்ளன. 9 விதமான அளவுகளில் அனைத்து வகையான பயனர்களுக்கும் பொருந்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
 
இந்த ஸ்மார்ட் மோதிரங்கள் மூன்று நிறங்களில் கிடைக்கின்றன: டைட்டானியம் பிளாக், டைட்டானியம் சில்வர், மற்றும் டைட்டானியம் கோல்டு. மொத்த வெளிப்புற உலோகம் டைட்டானியத்தால் ஆனது, இதனால் வலிமையானது மற்றும் மழையிலும் நீரிலும் பாதுகாப்பாக உள்ளது.
 
இந்தியாவில் அறிமுகமாகியுள்ளதை முன்னிட்டு, அக்டோபர் 18க்குள் முன்பதிவு செய்பவர்களுக்கு 25 வாட்ஸ் அடாப்டர் இலவசமாக வழங்கப்படும் என சாம்சங் அறிவித்துள்ளது. முன்பதிவு சாம்சங் இணையதளம் மற்றும் ஷோரூம்களில் செய்யலாம், மேலும் விரைவில் அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற ஆன்லைன் விற்பனை தளங்களில் கிடைக்கும். இந்திய சந்தையில் கேலக்ஸி ஸ்மார்ட் மோதிரத்தின் விலை ரூ. 38,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்