இந்தியாவில் உள்ள வங்கிகளில் உரிமைக் கோரப்படாமல் சுமார் ரூ.67 ஆயிரம் கோடி பணம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி நாடாளுமன்றத்தில் வெளியிட்ட புள்ளிவிவர அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
ஒரு வங்கி சேமிப்பு கணக்கில் 10 ஆண்டுகளுக்கு எந்த விதமான பரிவர்த்தனையும் செய்யப்படவில்லை என்றால் அந்த கணக்கு செயல்படாத வைப்புத்தொகை என வரையறுக்கப்படுகிறது.
இந்தியாவில் உள்ள பொத்துறை மற்றும் தனியார் வங்கிகளில் மொத்தமாக ரூ.67 ஆயிரம் கோடி பணம் உரிமைக் கோரப்படாமல் உள்ளது. இதில் பொதுத்துறை வங்கிகளில் மட்டும் 87 சதவீதம் பணம் உள்ளது. அதிகபட்சமாக எஸ்பிஐ வங்கியில் ரூ.19,239 கோடியும், பஞ்சாம் நேஷனல் வங்கியில் ரூ.6,910 கோடியும், கனரா வங்கி ரூ.6,278 கோடியும், பேங்க் ஆஃப் பரோடாவில் ரூ.5,277 கோடியும், யூனியன் பேங்க் ஆப் இந்தியாவில் ரூ.5,104 கோடியும் உரிமைக்கோரப்படாத பணமாக உள்ளது.
தனியார் வங்கிகளில் ரூ.8,673 கோடி உரிமைக்கோரப்படாத தொகை உள்ள நிலையில், அதிகபட்சமாக ஐசிஐசிஐ வங்கியில் ரூ.2,063 கோடி உள்ளது.
பழைய வங்கி கணக்குகளில் பணம் இருக்கிறதா என்பதை வாடிக்கையாளர்கள் அறிந்துக் கொள்ள இந்திய ரிசர்வ் வங்கி, UDGM என்ற இணையத்தளத்தை தொடங்கியுள்ளது.
Edit by Prasanth.K