செபி தலைவரை நீக்குங்கள்.! 22-ல் நாடு தழுவிய போராட்டம்.! காங்கிரஸ் அறிவிப்பு..!!

Senthil Velan

செவ்வாய், 13 ஆகஸ்ட் 2024 (16:17 IST)
ஹிண்டன்பர்க் விவகாரத்தில் வருகிற 22-ம் தேதி நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.  
 
அதானி குழும முறைகேடு புகார் தொடா்புடைய வெளிநாட்டு நிதி நிறுவனங்களின் முதலீட்டுத் திட்டங்களில் செபி தலைவர் மாதவி புரி புச் பல்லாயிரக்கணக்கான பங்குகளை வைத்திருந்ததாக ஹிண்டன்பர்க் கடந்த ஆகஸ்ட் 10-ஆம் தேதி அறிக்கை வெளியிட்டது. 
 
அதானியின் போலி நிறுவனம் என்ற குற்றச்சாட்டுக்குள்ளான நிறுவனத்தில், செபியின் தலைவர் மாதவிக்கும், அவரது கணவருக்கும் பங்குகள் இருந்ததாக ஹிண்டன்பர்க் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து வெளிப்படையான விசாரணை வேண்டும் என்றும் செபி தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.  

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தலைமையில் காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள், மாநிலத் தலைவர்கள், பொறுப்பாளர்கள் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய, காங்கிரஸ் பொதுச் செயலாளரும், எம்.பி.யுமான கே.சி.வேணுகோபால், “செபி தலைவரை பதவியில் இருந்து நீக்கக் கோரி, நாடு முழுவதும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார். 

ALSO READ: மனுபாக்கர் - நீரஜ் சோப்ரா திருமணம்.? முற்றுப்புள்ளி வைத்த மனுபாக்கரின் தந்தை..!!
 
ஒவ்வொரு மாநிலத்தின் தலைநகரிலும் அமலாக்க இயக்குனரக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெறும் என்றும்  இந்த விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை கோரிக்கையை முன்வைக்கவும் முடிவெடுத்துள்ளோம் என்றும் கே.சி.வேணுகோபால் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்