கர்நாடகாவில் ரஜினிக்கு சொத்துகள் இருக்கிறதா? - போட்டுடைத்த நண்பர்

ஞாயிறு, 21 மே 2017 (20:31 IST)
நடிகர் ரஜினிகாந்த் கர்நாடகாவில் சொத்துக்கள் வாங்கி குவிக்கவில்லை என அவரின் நீண்டகால நண்பர் ராஜ்பகதூர் கூறியுள்ளார்.


 

 
கடந்த 15ம் தேதி முதல் 19ம் தேதி ரஜினிகாந்த் தன்னுடைய ரசிகர்களை சந்திக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சிகளில் தற்காலிக அரசியல் பற்றியெல்லாம் பரபரப்பான கருத்துகளை தெரிவித்தார். தமிழகத்தில் நல்ல தலைவர்கள் இல்லை, சிஷ்டம் இல்லை. போர் வரும் போது நாம் பார்த்துக்கொள்வோம் எனக்கூறி ரசிகர்களை ஆர்ப்பரிக்க வைத்தார். அவரின் பேச்சு விரைவில் அவர் அரசியலுக்கு வருவார் என்பதையே காட்டியது. அவர் அரசியலுக்கு வருவதை சில தலைவர்கள் ஆதரித்தும், சிலர் எதிர்த்தும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் ரஜினிகாந்த பெங்களூரில் பேருந்தில் நடத்துனராக பணிபுரிந்த போது, அதில் ஓட்டுனராக பணிபுரிந்தவரும் , ரஜினியின் நீண்ட கால நண்பருமான ராஜ்பகதூர், ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி கருத்து தெரிவித்த போது “ ரஜினி நிச்சயமாக விரைவில் அரசியலுக்கு வருவார். தன்னை வாழவைக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கு அவர் ஏதேனும் செய்ய விரும்புகிறார். தமிழகத்தில் தற்போது அரசியல் சூழ்நிலை சரியில்லை. எனவே, மக்களின் விருப்பத்தை அவர் விரைவில் நிறைவேற்றுவார்.


 

 
அவர் அரசியலுக்கு வந்தால் பணத்தை பொருட்படுத்தாமல் செயல்படுவார். மேலும், ரஜினி கர்நாடகாவில் சொத்துகள் வாங்கி குவித்திருப்பதாக கூறுகிறார்கள். அதில் உண்மையில்லை. இங்கு வந்தால் தங்குவதற்காக 2 வீடுகள் மட்டுமே அவர் வாங்கியிருக்கிறார். மற்றபடி அவருக்கு கர்நாடகாவில் எந்த சொத்தும் கிடையாது. அவரின் அனைத்து சொத்துகளும் தமிழ்நாட்டில்தான் இருக்கிறது. அதுவும் நியாயமான மூதலீடுகள் மூலமே அதை செய்து வருகிறார். அவர் விரைவில் அரசியலுக்கு வருவார்” என அவர் தெரிவித்தார்.
 
ரஜினிகாந்த் சினிமாவில் நுழைய விருப்பப்பட்ட போது, அவரை சென்னைக்கு அனுப்பி தனது சொந்த செலவில் திரைப்பட கல்லூரியில் படிக்க வைத்தவர் இந்த ராஜ்பகதூர் என்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்