ரயில்வே கட்டணம் உயரப் போவதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ரயில் கட்டணத்தை உயர்த்த கூடாது என பிரதமருக்குக் கடிதம் எழுதியிருந்தார். இந்த நிலையில், விரைவு ரயில்களில் ஒரு கிலோமீட்டருக்கு ஒரு பைசா கட்டண உயர்வு பரிசீலனையில் இருப்பதாகவும், பிரதமர் மோடி அதை இறுதி செய்வார் என்றும் மத்திய ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று அளித்த பேட்டியில், "கொரோனா காலத்தில் இருந்து ரயில் கட்டணங்கள் உயர்த்தப்படவில்லை. தற்போது விரைவு ரயில்களில் ஒரு கிலோமீட்டருக்கு ஒரு பைசா மட்டுமே உயர்த்தும் திட்டம் பரிசீலனையில் உள்ளது," என்று அவர் கூறியுள்ளார். ஆனால், இந்தக் கட்டண உயர்வைப் பிரதமர் மோடி மற்றும் மத்திய ரயில்வே அமைச்சர் ஆகியோர் கலந்து ஆலோசனை செய்து ஜூலை 1 ஆம் தேதி அதிகாரபூர்வமாக அறிவிப்பார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கட்டண உயர்வை எதிர்க்கும் முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பலர் கள உண்மையை புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.
ஒரு கிலோமீட்டருக்கு ஒரு பைசா என்றால், 100 கிலோமீட்டருக்கு ஒரு ரூபாய் என்றும், 1000 கிலோமீட்டர் பயணம் செய்தாலே பத்து ரூபாய்தான் கட்டணம் உயரும் என்றும், இது பெரிய அளவில் பயணிகளை பாதிக்காது என்றும் கூறப்பட்டு வருகிறது.