மக்களவையை தெறிக்கவிட்ட ராகுல்.! அனல் பறக்கும் விவாதம்..! 2 முறை குறுக்கிட்ட பிரதமர் மோடி.!!

Senthil Velan

திங்கள், 1 ஜூலை 2024 (16:26 IST)
இந்துக்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக கூறி மக்களவையில் ராகுல் காந்தியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். மேலும் ராகுல் காந்தி பேசியபோது, பிரதமர் மோடியும், அமித்ஷாவும் குறுக்கிட்டு பேசியதால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
 
மக்களவை இன்று காலை கூடியதும் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. 
 
வெறுப்பை பரப்பவர்கள் பாஜகவினர்:
 
விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி,  பாஜக 24 மணி நேரமும் வெறுப்பை காட்டி வருகிறது என்று ஆவேசமாக கூறினார். மேலும் ராகுல் காந்தி இந்து கடவுளான சிவன் படத்தைக் காட்டி உரையாற்றினார். இதற்கு சபாநாயகர் ஓம் பிர்லா எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மக்களவையில் சிவன் படத்தை காட்ட அனுமதி இல்லையா என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார். 
 
மேலும், சிவன் கையில் இருக்கும் திரிசூலம் வன்முறைக்கானது இல்லை என்றும் அகிம்சைக்கானது என்றும் ராகுல் கூறினார். பாஜகவினர் உண்மையான இந்துக்கள் இல்லை என்றும் வெறுப்பை பரப்புவர்கள் எனவும் ராகுல் காந்தி கட்டமாக தெரிவித்தார். இதற்கு பாஜக எம்.பிக்கள்  எதிர்ப்பு தெரிவித்து கடும் அமளியில் ஈடுபட்டனர்.
 
பிரதமர் மோடி பதிலடி:
 
தொடர்ந்து ராகுல் பேசியபோது குறுக்கிட்ட பிரதமர் மோடி, ராகுல் காந்தியின் பேச்சு ஒட்டு மொத்த இந்து சமூகத்தின் மீதான தாக்குதல் என்று தெரிவித்தார். இந்துக்களை வன்முறையாளர்களாக காட்ட ராகுல் முயற்சிக்கிறார் என்று பிரதமர் கண்டனம் தெரிவித்தார்.
 
ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்:
 
தொடர்ந்து பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நாட்டில் உள்ள கோடிக்கணக்கான மக்கள், தங்களை கர்வமுடன் இந்துக்கள் என கூறி வருகின்றனர் என்றும் ராகுல் தனது பேச்சுக்கு இந்த அவையில் மட்டுமல்ல ஒட்டுமொத்த தேசத்திடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தெரிவித்தார். எமர்ஜென்சி காலத்தில் தேசத்தையே சிறையில் அடைத்தவர்களுக்கு அபயத்தை பற்றி பேசுவதற்கு அருகதை இல்லை என்று அமித்ஷா கூறினார்.
 
ராகுலின் மைக் அணைப்பு:
 
மீண்டும் சிவபெருமானின் படத்தை எடுத்துக் காட்டியதுடன், அயோத்தியை உள்ளடக்கிய தொகுதியில் வெற்றிபெற்ற சமாஜ்வாதி கட்சியின் எம்.பி.க்கு ராகுல் வாழ்த்து தெரிவித்தார்.
 
மேலும், அயோத்தியில் ராமர் பிறந்த மண்ணிலேயே பாஜகவிற்கு பாடம் புகட்டப்பட்டுள்ளது என்று அவர் விமர்சித்தார்.  ராகுலின் பேச்சின்போது இடையிடையே மைக் அணைக்கப்பட்டதால், 'மைக் கன்ட்ரோல் யாரிடம் உள்ளது? அயோத்தி என்ற பெயரை சொன்ன உடனே என்னுடைய மைக் அணைக்கப்பட்டுவிட்டது  என ராகுல் கேள்வி எழுப்பினார்.
 
மோடியை எச்சரித்த கணிப்பாளர்கள்:
 
தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி,  அயோத்தி அமைந்துள்ள தொகுதியில் போட்டியிட வேண்டும் என மோடி 2 முறை முயற்சி செய்ததாகவும், ஆனால், அயோத்தியில் போட்டியிட வேண்டாம், மக்கள் தோற்கடித்துவிடுவார்கள் என கணிப்பாளர்கள் எச்சரித்தனர் எனவும் தெரிவித்தார்.

மேலும் பிரதமர் மோடி, பாஜக எம்.பிக்களையே பயமுறுத்தும் விதமாக இருக்கிறார் என்று ராகுல் குற்றம் சாட்டினார். ராமர் கோயில் திறந்துவைக்கப்பட்டபோது அம்பானி, அதானி மட்டுமே அங்கு இருந்தனர் என்றும் சிறு வியாபாரிகளை தெருவில் வீசினர் என்றும் அவர் தெரிவித்தார்.  
 
பாஜகவை தோற்கடித்த அயோத்தி மக்கள்:
 
அயோத்தி மக்களின் நிலத்தை பறித்து விட்டதாக தெரிவித்த ராகுல் காந்தி,  வீடுகளை இடித்து விட்டனர் என்றும் கோயில் திறப்பு விழாவில் அங்குள்ள மக்கள் கூட வரவில்லை என்றும் வேதனை தெரிவித்தார். அதனால் தான் அயோத்தி மக்கள் பாஜகவிற்கு நல்ல தீர்ப்பை அளித்தனர் என்றும் அரசியலமைப்பு சட்டம் எதை சொல்கிறதோ அதன்வழியில் நடக்கிறேன் என்றும் ராகுல் காந்தி குறிப்பிட்டார்.
 
ராகுலுக்கு கற்பிக்க வேண்டும்:
 
அப்போது மீண்டும் குறுக்கிட்டு பேசிய பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவரை நான் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என ஜனநாயகமும், அரசியல் சாசனமும் எனக்கு கற்பித்து இருக்கிறது என்று தெரிவித்தார். ஜனநாயகத்தை பற்றியும், அரசியல் சாசனத்தை பற்றியும் ராகுலுக்கு கற்பிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்