பிரதமர் மோடியின் சிக்கிம் பயணம் கடைசி நிமிடத்தில் ரத்து.. என்ன காரணம்?

Mahendran

வியாழன், 29 மே 2025 (10:45 IST)
பிரதமர் மோடி இன்று சிக்கிம் மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் செய்ய இருந்த நிலையில், கடைசி நிமிடத்தில் அந்த பயணம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
பிரதமர் மோடி இன்றும் நாளையும் சிக்கிம், மேற்கு வங்கம், பீகார், உத்தரபிரதேசம் உள்ளிட்ட நான்கு மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டு இருந்தார். சிக்கிம் மாநிலம் உருவாகி 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில், இன்று காலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்ள இருந்தது.
 
இதற்காக விழா நடைபெறும் இடத்தில் சிறப்பான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. இன்று காலை 11 மணிக்கு இந்த நிகழ்வு தொடங்கும் என்ற நிலையில், திடீரென பிரதமர் மோடியின் பயணம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
ஆனால் அதே நேரத்தில், மேற்கு வங்கத்திலிருந்து காணொளி காட்சி மூலம் சிக்கிம் மக்கள் மத்தியில் அவர் உரையாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சிக்கிம் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
 
மோசமான வானிலை காரணமாக இந்த பயணம் ரத்து செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில், மேற்கு வங்கம், பீகார், உத்தரபிரதேச நிகழ்வுகளில் அவர் திட்டமிட்டபடி கலந்து கொண்டு, 70 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்