ஜூன் வரை ஊரடங்கு உத்தரவா? அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் விளக்கம்

செவ்வாய், 7 ஏப்ரல் 2020 (07:50 IST)
இந்தியா முழுவதும் பரவலாக கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து மத்திய அரசு கடந்த மார்ச் 24ஆம் தேதி ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது. இந்த ஊரடங்கு உத்தரவு 21 நாட்கள் அமலில் இருக்கும் என்று தெரிவித்த நிலையில் வரும் 14 ஆம் தேதியோடு இந்த ஊரடங்கு உத்தரவு முடிவடைகிறது
 
இதனை அடுத்து ஏப்ரல் 15 முதல் ரயில்கள், தனியார் விமானங்கள் ஆகியவை இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் முன்பதிவும் தொடங்கி விட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் திடீர் திருப்பமாக நேற்று தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அவர்கள் ஜூன் 3 வரை தெலுங்கானா மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க ஆலோசனை செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார்
 
இதேபோல் மத்திய அரசும் ஊரடங்கு உத்தரவை நீடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவு பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றபோது அதில் ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டதாகவும் இதுகுறித்து தகுந்த நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என்றும் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார் 
 
தற்போதைய சூழலை ஒவ்வொரு கணமும் கண்காணித்து வருவதாகவும் நாட்டின் நலனை கருதி ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது குறித்த முடிவை பிரதமர் எடுப்பார் என்று அவர் தெரிவித்தார். ஆனால் அதே நேரத்தில் ஊரடங்கு உத்தரவு மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்