ஜம்மு மற்றும் காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு, நாட்டின் நலனுக்கு எதிராக செயல்படுகிற சில சமூக ஊடக நபர்கள் மற்றும் தளங்களை பற்றி மத்திய அரசிடம் விரிவான தகவல்களை பாராளுமன்ற தகவல் தொழில்நுட்ப நிலைக் குழு கேட்டுள்ளது.
சில சமூக ஊடக இன்ஃப்ளூயன்சர்கள் மற்றும் இணையதளங்கள் நாட்டின் நலனுக்கு எதிராக செயல்பட்டு, வன்முறையை தூண்டும் சூழ்நிலை உருவாக்குகின்றன என்று அந்த குழு, தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் மற்றும் மின்னணு, தகவல் தொழில்நுட்ப அமைச்சகங்களுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.
இந்திய தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000 மற்றும் 2021இல் அறிவிக்கப்பட்ட வழிகாட்டிகள் மற்றும் டிஜிட்டல் ஊடக நெறிமுறை விதிகள் அடிப்படையில், இத்தகைய தளங்களை தடை செய்ய திட்டமிட்டுள்ள நடவடிக்கைகள் என்னவென்று அந்த அமைச்சகங்களிடம் கேட்டுள்ளனர். இந்த விவரங்களை மே 8க்குள் வழங்குமாறு அந்த இரண்டு அமைச்சங்களின் செயலாளர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிவுறுத்தலில், பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக ஊடக பயனாளர்கள், பாதுகாப்பு மற்றும் ராணுவம் தொடர்பான விஷயங்களை பற்றி மிகுந்த பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் எச்சரித்துள்ளது.