பிரதமரின் திட்டங்களை புகழ்ந்த ப.சிதம்பரம் – காங்கிரஸ் இதை சொல்லவில்லையா?

வெள்ளி, 16 ஆகஸ்ட் 2019 (20:30 IST)
சுதந்திர தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசிய கருத்துகளுக்கு ப.சிதம்பரம் ஆதரவு தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நரேந்திர மோடி பிரதமரான காலத்திலிருந்தே அவரது பல்வேறு திட்டங்களை எதிர்த்து பேசி வந்தவர் காங்கிரஸ் உறுப்பினரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம். பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளின்போது பாஜக அரசை படுபயங்கரமாக விமர்சித்தவர் ப.சிதம்பரம்.

நேற்று நடந்த சுதந்திர தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று செங்கோட்டையில் கொடியேற்றினார். பிறகு மக்களிடம் உரையாற்றிய அவர் பல்வேறு நலத்திட்டங்கள் பற்றியும், இந்தியா செழிப்படைய மக்களின் பங்களிப்பு எவ்வளவு முக்கியம் என்பது குறித்தும் பேசினார்.

அவர் பேசிய பல கருத்துகளில் இருந்து முக்கியமான மூன்று கருத்துகளை தாம் ஆதரிப்பதாக தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார் ப.சிதம்பரம். அந்த பதிவில் அவர் ”பிரதமர் மோடி சுதந்திர தினத்தன்று பேசிய மூன்று முக்கியமான விஷயங்களை நாம் அனை வரும் வரவேற்க வேண்டும். சிறிய குடும்பம் என்பது தேசத்திற்கான கடமை, செல்வத்தை உருவாக்குபவர்களை மதித்தல், பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழித்தல்” என்று குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் மக்கள் தொகை உயர்ந்து வருவதை கட்டுப்படுத்தினாலே இந்தியாவின் பொருளாதார சூழலை வளப்படுத்த முடியும். பொருளாதாரரீதியாக இந்தியாவை வளப்படுத்தும் செல்வந்தர்களை அங்கீகரிக்க வேண்டும், நாட்டின் இயற்கை வளத்தை கெடுக்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டை முழுவதுமாக கைவிட வேண்டும் என நரேந்திர மோடி பேசியுள்ளார்.

இவை அரசியல்ரீதியாக யாரையும் தாக்காத பொதுநலன் கருதிய கருத்துக்களாக இருப்பதால் சிதம்பரம் ஆதரித்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர். எனினும் காங்கிரஸ் உட்பட பல கட்சிகளும், மக்கள் தொகை பெருக்கம், பிளாஸ்டிக் ஒழிப்பு பற்றி பேசி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் தொடர்ந்த அவர் ட்வீட்டுகளில் இந்த மூன்று அம்சங்கள் பற்றி பிரதமருக்கு ஆதரவாக போஸ்டுகளை பதிவிட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் சிறு பரபரப்பை ஏற்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது.

All of us must welcome three announcements made by the PM on I-Day

> Small family is a patriotic duty
> Respect wealth creators
> Shun single-use plastic

— P. Chidambaram (@PChidambaram_IN) August 16, 2019

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்