இறுதி சடங்குக்கு காசில்ல..! தாயின் சடலத்தை சாலையில் வைத்து பிச்சை கேட்ட சிறுமி! - நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்!

Prasanth Karthick

திங்கள், 19 ஆகஸ்ட் 2024 (10:30 IST)

தெலுங்கானாவில் தற்கொலை செய்து கொண்ட தாய்க்கு இறுதி சடங்கு செய்ய காசில்லாமல், சிறுமி பிச்சையெடுத்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள பெல்தரோடா என்ற கிராமத்தை சேர்ந்தவர் கங்காமணி என்ற 35 வயது பெண்மணி. இவரது கணவர் சில வருடங்களுக்கு முன்னால் உயிரிழந்துவிட்ட நிலையில் தனது 11 வயது மகள் துர்காவுடன் தனியே வசித்து வந்துள்ளார் கங்காமணி. விவசாயக் கூலியாக வேலைபார்த்து மகளையும் படிக்க வைத்து வந்துள்ளார்.

 

6ம் வகுப்பு பயின்று வரும் சிறுமி துர்கா, சமீபத்தில் தனது தாய் கங்காமணியிடம் சண்டை போட்டு கோபித்துக் கொண்டு பெரியம்மா வீட்டிற்கு சென்றுள்ளார். திரும்ப வந்து பார்க்கும்போது கங்காமணி தூக்கிட்டு தற்கொலை செய்திருந்ததை கண்டு துர்கா அலறி துடித்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் சம்பவ இடம் விரைந்து கங்காமணி உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி, பின்னர் துர்காவிடம் ஒப்படைத்துள்ளனர்.

 

ஆனால் சிறுமி துர்காவிடம் தனது அம்மாவிற்கு இறுதி சடங்குகள் செய்ய பணம் இல்லை. இதனால் தன் வீட்டின் முன்னால் இருந்த வீதியில் தாயின் உடலைக் கிடத்தி, அப்பகுதியில் போவோர், வருவோரிடம் இறுதிச்சடங்குக்கு உதவும்படி யாசகம் கேட்டுள்ளார் சிறுமி. அந்த காட்சி காண்போரை கலங்க செய்துள்ளது.

 

உடனடியாக உள்ளூர் போலீஸ்காரர்கள் சிலரும், துர்காவின் ஆசிரியர்களும் தங்களிடம் இருந்த பணத்தை துர்காவுக்கு கொடுத்து உதவியுள்ளனர். மேலும் பிஆர்எஸ் கட்சியை சேர்ந்த சிலரும் சிறுமிக்கு உதவி, கங்காமணி உடலை நல்லடக்கம் செய்துள்ளனர்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்