20 லட்ச ரூபாய் நகையை தூக்கி கொண்டு சென்ற குரங்கு.. சிசிடிவி காட்சி மூலம் கண்டுபிடித்த போலீஸ்..!

Mahendran

திங்கள், 9 ஜூன் 2025 (11:35 IST)
உத்தரப்பிரதேச மாநிலத்தில், கோவிலுக்கு வந்த ஒரு பெண்ணிடம் இருந்து 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகையை பறித்துக் கொண்டு, குரங்கு மரத்துக்கு மரம் தாவி மாயமானதாகவும், இதை அடுத்து சிசிடிவி காட்சி மூலம் அந்த நகை பையை போலீசார் கண்டுபிடித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஆக்ராவில் பிருந்தாவன் நகரில் அமைந்துள்ள ராதா கிருஷ்ணன் கோவிலுக்கு, அபிஷேக் மற்றும் அவரது மனைவி உட்பட குடும்பத்துடன் சாமி கும்பிட வந்தனர். அப்போது திடீரென, ஒரு குரங்கு அபிஷேக் மனைவி வைத்திருந்த கையைப்பையை பிடுங்கிக்கொண்டு ஓடியது. அந்த பையில் வைர நெக்லஸ் உட்பட 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் இருந்தன.
 
அபிஷேக் குடும்பத்தினர் அந்த குரங்கை விரட்டிச் சென்றனர். ஆனால், அந்த குரங்கு மரத்துக்கு மரம் தாவி மாயமானது. இதனைத் தொடர்ந்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, குரங்கு சென்ற இடத்தில் தேடலை ஆரம்பித்தனர்.
 
சுமார் 8 மணி நேர தேடுதலுக்கு பிறகு, அபிஷேக் மனைவியின் கைப்பை ஒரு புதரில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்னர், போலீசார் அதை அபிஷேக்கிடம் ஒப்படைத்தனர்.
 
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இதே போன்று, குரங்கு அந்த கோவிலுக்கு வரும் பக்தர்களின் பொருட்களை பிடுங்கிச் சென்ற சம்பவங்கள் நடந்துள்ளன. எனவே, குரங்குகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்