மகாராஷ்டிர அரசியலில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பிரிந்திருந்த தாக்கரே சகோதரர்களான ராஜ் தாக்கரே மற்றும் உத்தவ் தாக்கரே ஆகியோர், மராத்தி மொழியின் மேம்பாட்டிற்காக மீண்டும் ஒரு மேடையில் ஒன்றிணையவுள்ளனர். தாக்கரே சகோதரர்களின் இந்த அபூர்வமான இணைப்பு, மகாராஷ்டிராவின் அரசியல் களத்தில் புதிய அரசியல் கூட்டணியின் தொடக்கமா என்ற பலத்த ஊகங்களை தூண்டியுள்ளது.
மகாராஷ்டிராவில் முன்மொழியப்பட்ட மும்மொழி கொள்கைக்கு எதிராக இரு தலைவர்களும் ஒருமித்த குரலில் எதிர்ப்பை தெரிவித்ததால், ஆளும் அரசு அந்த கொள்கையை நிறுத்தி வைத்தது. இந்த 'மராத்தி ஒற்றுமையின் வெற்றியை' கொண்டாடும் விதமாக, இன்று ஒரு பிரம்மாண்ட பேரணி நடைபெறவுள்ளது.
இந்த 'வெற்றி பேரணிக்கு' தேசியவாத காங்கிரஸ் நிறுவனர் சரத் பவார் மற்றும் காங்கிரஸ் தலைவர் ஹர்ஷவர்தன் சப்பால் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இருப்பினும், சரத் பவார் இந்த பேரணியில் பங்கேற்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.