மகாராஷ்டிராவில் கூரியர் டெலிவரி செய்வது போல நடித்து இளம்பெண்ணை மர்ம ஆசாமி வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள கோண்ட்வா பகுதியில் 22 வயது இளம்பெண் ஒருவர் தனியார் நிறுவனத்தில் வேலைப்பார்த்துக் கொண்டு தனது சகோதரருடன் வசித்து வந்துள்ளார். நேற்று மாலை பெண்ணின் சகோதரர் வெளியே சென்றிருந்தபோது 7 மணியளவில் ஒரு நபர் கூரியர் கொடுக்க வந்துள்ளார்.
கூரியரை இளம்பெண் வாங்கியபோது கையெழுத்திட பேனா இல்லை என்று அந்த நபர் சொல்ல, பேனா எடுப்பதற்காக இளம்பெண் உள்ளே சென்றுள்ளார். உடனே அந்த நபர் கதவை தாழிட்டுள்ளார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த இளம்பெண்ணை அவர் தாக்கியதாக தெரிகிறது.
சில மணி நேரங்கள் கழித்து இளம்பெண் எழுந்தபோது தனது உடல் முழுவதும் வலியை உணர்ந்துள்ளார். தான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதை உணர்ந்து அதிர்ச்சி அடைந்த அவர் செல்போனை எடுத்துள்ளார். அதில் அந்த நபர் இளம்பெண்ணுடன் படுக்கையில் இருக்கும் ஒரு செல்பியை எடுத்து வைத்துவிட்டு ஒரு குறுஞ்செய்தியையும் வைத்துவிட்டு சென்றுள்ளார். இந்த விஷயத்தை யாரிடமாவது சொன்னால் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு விடுவேன் என அந்த மிரட்டல் இருந்துள்ளது.
இதுகுறித்து இளம்பெண்ணின் சகோதரர், உறவினர்களுக்கு தெரிய வர அவர்கள் போலீஸில் புகார் அளித்துள்ளனர். அதன் பேரில் போலீஸார் அந்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.
Edit by Prasanth.K