இந்தில எங்க இருக்கு.. இங்கிலீஷ்லதானே இருக்கு! – குற்றவியல் சட்ட வழக்கில் மத்திய அரசின் குழப்ப விளக்கம்!

Prasanth Karthick

வியாழன், 4 ஜூலை 2024 (11:43 IST)

புதிய குற்றவியல் வழக்குகளுக்கு இந்தி, சமஸ்கிருதத்தில் பெயர் வைக்கவில்லை என மத்திய அரசு தரப்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கம் பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

சமீபத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 3 புதிய குற்றவியல் சட்டங்களுக்கும் எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்புகளையும், கண்டணங்களையும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் குற்றவியல் சட்டங்களுக்கு ’பாரதிய நியாய சன்ஹிதா’ என இந்தி, சமஸ்கிருதம் கலந்து பெயர் வைத்துள்ளதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாக புதிய குற்றவியல் சட்டங்களுக்கு இந்தி, சமஸ்கிருதத்தில் பெயரிட்டிருப்பதாக இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் மத்திய அரசு விளக்கமளிக்க உத்தரவிடப்பட்டிருந்த நிலையில் இன்று மத்திய அரசு சார்பில் கூடுதல் சோலிசிட்டர் ஜெனரல் சுந்தரேசன் விளக்கம் அளித்தார்.

அதில் அவர் “3 புதிய குற்றவியல் சட்டங்களும் ஆங்கிலத்தில்தான் நிறைவேற்றப்பட்டன. ’Bharatiya Nyaya Sanhita’ என சட்டங்களின் பெயர்கள் கூட இந்தி, சமஸ்கிருதத்தில் இல்லாமல் ஆங்கில எழுத்துகளில்தான் இடம்பெற்றுள்ளன. எனவே இதில் அரசமைப்பு சட்ட விதிகள் எதுவும் மீறப்படவில்லை” என விளக்கமளித்துள்ளார்.

இந்தி, சமஸ்கிருதத்தில் உள்ள பெயரை ஆங்கில எழுத்துக்களில் எழுதிவிட்டால் அது ஆங்கிலம் ஆகிவிடுமா என குழப்பத்தில் பலரும் ஆழ்ந்துள்ளனர்.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்