குற்றவாளிகளை கைது செய்ய செல்லும்போது காவல்துறையினர் தாக்கப்பட்டால், அவர்கள் துப்பாக்கி சூடு நடத்த தயங்க வேண்டாம் என்று கேரள மாநில ஏ.டி.ஜி.பி. வெங்கடேஷ் உத்தரவு பிறப்பித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் கேரளாவின் திருச்சூரில் ஒரு ரவுடி தனது பிறந்தநாளை கொண்டாடியபோது, இரு கோஷ்டிகளுக்கு இடையே திடீரென மோதல் வெடித்தது. ஒருவரையொருவர் தாக்கி மோதலில் ஈடுபட்டிருந்த நிலையில், இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரவுடிகளை விரட்டியடித்தனர். அப்போது, ரவுடிகள் சிலர் போலீசாரை தாக்கியதாகவும், போலீஸ் வாகனங்களையும் அடித்து உடைத்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தை தொடர்ந்தே, கேரள மாநில ஏ.டி.ஜி.பி. வெங்கடேஷ் அவர்கள் காவல்துறைக்கு ஒரு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார். அதில், காவல்துறையினர் தங்களை பாதுகாத்துக் கொள்ளவும், பொதுமக்களை காப்பாற்றவும் துப்பாக்கியை தாராளமாக பயன்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளார். மேலும், குற்றவாளியை கைது செய்ய செல்லும்போது தற்காப்புக்காக துப்பாக்கியால் சுட வேண்டிய நிலை ஏற்பட்டால், தயங்காமல் துப்பாக்கியால் சுடலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.