எங்க கடைக்கு வந்து கொரோனா வந்துட்டா பரிசு! – சலுகை போட்ட கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள்!

புதன், 19 ஆகஸ்ட் 2020 (12:55 IST)
நாடு முழுவதும் கொரோனா தொற்றால் மக்கள் பதட்டத்தில் உள்ள நிலையில் தங்கள் கடைக்கு வருபவர்களுக்கு கொரோனா வந்தால் பரிசு வழங்கப்படும் என அறிவித்த கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றின் காரணமாக கடந்த சில மாதங்களாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டு கடைகள் மூடப்பட்டிருந்தன. தற்போது கடைகள் மீண்டும் திறக்கப்பட்டு வரும் நிலையில் விற்பனையை அதிகரிக்க பலர் நூதனமான விளம்பரங்களை அளித்து வருகின்றனர். இந்நிலையில் கேரளாவை சேர்ந்த எலக்ட்ரானிக் பொருட்கள் விற்கும் கடை ஒன்று விளம்பரம் ஒன்றை செய்துள்ளது.

தங்கள் கடைக்கு பொருட்கள் வாங்க வருபவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் 50 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இதனால் அங்கு மக்கள் கூட்டம் கூடியதால் கொரோனா பாதிப்பு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. இதுகுறித்து ஒருவர் கேரள முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார். முதல்வர் கவனத்திற்கு இந்த விவகாரம் கொண்டு செல்லப்பட்ட நிலையில் அரசு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கடையை சீல் வைத்துள்ளனர். மேலும் கடையின் உரிமையாளரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்