ஐஐடியில் தற்கொலை செய்த ஜப்பான் மாணவர்! – கவுஹாத்தியில் பரபரப்பு!

வெள்ளி, 22 நவம்பர் 2019 (14:19 IST)
கவுஹாத்தி ஐஐடியில் படித்து வந்த ஜப்பானிய மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜப்பானில் உள்ள ஜிபு பல்கலைக்கழகத்தை சேர்ந்த 23 வயது மாணவர் கோட்டா அனாடோ. இவர் சர்வதேச மாணவர்கள் பரிமாற்ற திட்டத்தின் படி அசாமில் உள்ள ஐஐடியில் 3 மாத கால பயிற்சி படிப்புக்கு வந்துள்ளார்.

மூன்று மாத காலம் பயிற்சி படிப்பு முடிந்து நவம்பர் 30 மீண்டும் தாயகம் திரும்ப இருந்தார் அனாடோ. நேற்று இவர் தங்கியிருந்த கல்லூரி விடுதியின் அறை நீண்ட நேரமாக மூடியே இருந்திருக்கிறது. திறக்க முயற்சித்த போது உள்பக்கம் தாழிட்டு இருந்துள்ளது.

உடனடியாக கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி. உள்ளே அனாடோ தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். உடனடியாக அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வெளிநாட்டிலிருந்து படிக்க வந்த மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்