10 ஆண்டுகளில் 25 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டுள்ளேன்.! பிரதமர் மோடி பெருமிதம்...!

Senthil Velan

செவ்வாய், 30 ஏப்ரல் 2024 (15:08 IST)
கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டுள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
 
மகாராஷ்டிரா மாநிலம் மத் நகரில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அவர், காங்கிரஸின் 60 ஆண்டுகால ஆட்சிக்கும், கடந்த 10 ஆண்டுகால ஆட்சிக்கும் உள்ள வித்தியாசத்தை மக்கள் பார்க்கிறார்கள் என தெரிவித்தார்.  கடந்த 60 ஆண்டுகளாக அவர்கள் சாதிக்காததை 10 ஆண்டுகளில் பாஜக சாதித்துள்ளதாக மோடி பெருமிதம் தெரிவித்தார்.
 
ரயில்வே, சாலைவசதி மற்றும் விமானநிலையங்களில் பெருமளவில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது என்றும் உள்கட்டமைப்புக்கான பாஜகவின் ஆண்டு பட்ஜெட், காங்கிரஸ் அரசின் பத்து ஆண்டுகால உள்கட்டமைப்பு பட்ஜெட்களுக்கு சமம் என்றும் அவர் கூறினார்.

இந்த 60 ஆண்டுகளில், உலகில் உள்ள பல நாடுகள் முற்றிலுமாக மாறிவிட்டது, ஆனால் இந்த 60 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி விவசாயிகளுக்கு தண்ணீர் வழங்கவில்லை என்றும் 2014-ம் ஆண்டில் பல ஆண்டுகளாக நூற்றுக்கணக்கான நீர்பாசனத் திட்டங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன என்றும் பிரதமர் தெரிவித்தார். அவற்றில் 26 திட்டங்கள் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவை என தெரிவித்த பிரதமர், மகாராஷ்டிராவுக்கு காங்கிரஸ் கட்சி எவ்வளவு பெரிய துரோகத்தை செய்துள்ளது என்பதை நினைத்துப் பாருங்கள் என்று கூறினார்.

ALSO READ: தமிழகத்தில் நடப்பது அரசா..? மது வணிக நிறுவனமா..? அன்புமணி கண்டனம்..!!
 
கடந்த 10 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான பெண்கள் சுயஉதவிக்குழுவில் இணைந்துள்ளனர் என்றும் ஒரு கோடி பெண்களை நாங்கள் லக்சாதிபதி சகோதரிகளாக உருவாக்கியுள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.  இந்தியா விரைவில் 3 கோடி லக்சாதிபதி சகோதரிகளை உருவாக்கும் என்று பிரதமர் மோடி உறுதி அளித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்