இந்து மகாசபை தலைவர் சுட்டுக்கொலை! – உ.பியில் பரபரப்பு!

வெள்ளி, 18 அக்டோபர் 2019 (17:40 IST)
உத்தர பிரதேச மாநிலத்தில் இந்து மகா சபை தலைவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீப காலமாக உத்தர பிரதேசத்தில் மத ரீதியான மோதல்கள் அதிகரித்து வருகின்றன. ஏற்கனவே இந்து மகா சபை சார்ந்த சிலர் அங்கு சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் மீண்டும் ஒரு கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள இந்து மகா சபையின் தலைவராக பொறுப்பு வகித்து வருபவர் கமலேஷ் திவாரி. கமலேஷின் அலுவலகத்துக்குள் புகுந்த மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கியால் கமலேஷை சரமாரியாக சுட்டுவிட்டு தப்பியோடினர்.

துப்பாக்கி சத்தம் கேட்டு அருகிலிருந்தோர் ஓடிவந்து பார்க்கையில் கமலெஷ் ரத்த வெள்ளத்தில் கிடந்திருக்கிறார். உடனே அவரை அருகிலுள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதித்து இருக்கிறார்கள். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கொடூர கொலை குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்